கேணல் பரிதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு-பிரான்ஸ்


கேணல் பரிதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு தயரில் நகரில் இடம் பெற்றது.

மாணவர் மதிப்பளித்தல் நிகழ்வும் ஒருமித்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பும் இணைந்து இவ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.  மங்கள விளக்கேற்றலுடன்  தேசிய கொடி ஏற்றப்பட்டு மலர் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வணக்க நிகழ்வில்  உயர்கல்வியை முடித்து பட்டம் பெறற் மாணவர்களின் மதிப்பளிப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து இசை,கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெற்றது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணைப்பு 2

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு சுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம் பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வு நந்தியார் பகுதியில் நேற்று (02.12.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச் சங்கத்தலைவர் திரு.சாந்திக்குமார் அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

லாக்கூர்நொவ் தமிழ்ச்சோலை, ஒர்பேவில்லியே தமிழ்ச்சோலை, இவ்றிசூசென் தமிழ்ச்சோலை   ஆகிய மாணவிகள் மற்றும் செல்வி சௌமியா ஆகியோர் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி ஜனனி  அவர்களின் பரிதி அண்ணா நினைவு சுமந்த கவிதை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயலாளர் திருமதி சயந்தி அவர்களின் பேச்சு என்பன இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் சிறப்புரையை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு. கோவை குப்புசாமி இராமகிருஸ்ணன் அவர்கள் வழங்கியிருந்தார். அவர்தனது உரையில், கேணல் பரிதி அவர்களுடன் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலங்களை நினைவுபடுத்தியிருந்ததுடன், இவ்வாறான நிகழ்வுகள் தமக்கு மெய்சிலிர்க்கவைப்பதாகவும், இலங்கையில் சிங்கள அரசுகள் தரப்படுத்தல் முறையில் தமிழ் மக்களின் கல்வியை சீர்குலைக்கும் நிலையில், புலம்பெயர் வாழ் தமிழ் குழந்தைகள் இவ்வாறு ஒவ்வொருதுறைகளிலும் பட்டம்பெற்று எமது தமிழ் ஈழத்தை அடைவதற்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்று உணர்வுபொங்கத் தெரிவித்திருந்தமை அனைவரையும் கைகளைத் தட்டி உற்சாகமடைய வைத்ததுடன், ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 13 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார்.

கிறிஸ்ரியன் மதுஷா, வசந்தகுமாரன் கஸ்தூரி, மாணிக்கதியாகராஜா ஹரிகரன், ராசலிங்கம் றொஷான், மனோகரன் லக்ஸ்மன், நடேசு ஜனினா, ராஜதுரை சுஜீவ், பாலசுப்பிரமணியம் பிரணவி, மகேந்திரநாதன் பபியான், சண்முகதாசன் ஜீவிதன், சுபாஸ்கரன் விவியன், தயாபரன் பிரதீப், சுந்தரலிங்கம் விவேக் ஆகிய மாணவர்கள்  சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். குறித்த மாணவர்களில்11 மாணவ மாணவிகள் பொறியியல் ((Ingénieur) பிரிவிலும், 1 மாணவி மருத்துவத்தாதி (Infirmier) பிரிவிலும், 1 மாணவி மருந்தாளர் ( Préparatrice en pharmacie) பிரிவிலும் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.