இ.தொ.கா.விற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபட்டு வந்த பணி பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் 9 வது நாளாக இன்று (12) மேற்கொள்ளபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அந்த வகையில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு, கீழ்பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் சாஞ்சிமலை பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக டயர்களை ஏரித்தும், தேங்காய் உடைத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு நாங்கள் கடந்த 09 நாட்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் இன்று காலை திடீர் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பணிக்கு தொழிலாளர்களை திரும்பும் மாறும் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதியோடு கலந்துரையாட இருப்பதாகவும் இன்று அறிக்கை விடுகிறார்.
எனவே, இவ்வளவு நாளாக ஜனாதிபதியை ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியாதா?, எனவே ஒட்டு மொத்த தோட்ட தொழிலாளர்களையும் ஆறுமுகன் தொண்டமான் காட்டி கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
எது எவ்வாறாக இருப்பினும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் கூறியவாறு, 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று கொடுத்தே ஆகவேண்டும் எனவும் இம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, 09 வது நாளாகவும் பெரும்பாலான தோட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க பொகவந்தலாவ, கெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு, மத்திய பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இன்று பணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.