புதிய அரசமைப்பு உத்தேச வரைவு நாளை வருகிறது.
அதனோடு 4 ஆவணங்களையும் முன்வைக்க வழிநடத்தல் குழு முடிவு
புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவை – நிபுணர்குழுவின் அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை, அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு வழிநடத்தல் குழு நேற்று முடிவு செய்துள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையுடன் மேலும் 4 அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளன. அறிக்கைகள் மீதான விவாதத்துக்கான திகதி, இந்த அமர்வில் அல்லது வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
வழிநடத்தல் குழுவின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது. இதன்போது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடவிருந்த நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ஆவணங்களை நாளை வெள்ளிக்கிழமை சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணயசபையாகக் கூடவுள்ளது. இதன்போது, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவை – நிபுணர்குழுவின் அறிக்கையைச் சமர்பிப்பார்.
அதனுடன் இணைந்து நிபுணர் குழுவின் கருத்துக்கள், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், இடைக்கால அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் தொகுப்புக்கள், மாகாண முதலமைச்சர்கள் வழிநடத்தல் குழுவுக்கு வழங்கிய அறிக்கைகள் என்பனவும் சமர்பிக்கப்படவுள்ளன.
அறிக்கைகள் சமர்பிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்கள் பதிலளிக்கவுள்ளனர். சுமார் 2 மணிநேரம், அரசமைப்பு நிர்ணய சபையாக நாடாளுமன்றம் அன்று செயற்படும் என்று தெரியவருகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
கருத்துகள் இல்லை