இந்தியா கொடுத்த அடி; பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப், மார்ஷுக்கு முழுக்கு!


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்த நிலையில், முக்கிய வீரர்களான ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகியோர் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினர். முக்கியமாக, பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக மோசமாக விளையாடியது, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ் மற்றும் மிச்செல் மார்ஷ் ஆகியோரை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலக்கியுள்ளது ஆஸ்திரேலிய தேர்வுக்குழு. துவக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ், மேட் ரென்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுமுகமான வில் புக்கோஸ்கியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாற்றங்கள் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் ட்ரெவர் ஹோன்ஸ், "இந்திய தொடரில் சில மோசமான முடிவுகள் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில மாற்றங்களை செய்துள்ளோம். ஆரோன், பீட்டர், ஷான், மிச்சேல் ஆகியோர் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போதும், அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை" என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.