ரொறன்ரோ டவுன்ரவுணில் கொள்ளை : நால்வர் கைது !


ரொறன்ரோ டவுன்ரவுணில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், டன்டாஸ் வீதி மேற்கு மற்றும் விக்டோரியா வீதிப் பகுதியில் இந்தக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதி வழியாக சென்றுகெர்ணடிருந்த 20 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களை அணுகிய கும்பல் ஒன்று, அவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்த பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், வழிப்பறியினை மேற்கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இத்தச் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 16, 18, 26 வயதுடைய ருதர்போர்ட் மற்றும் 32 வயதுடைய அப்துல்லா அப்துல்காதர்  என நால்வரைக் கைது செய்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரான 18 வயது இளைஞர் ஸ்டீவன் தவநாயகம் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினையும் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலும் நான்கு சந்தேகநபர்களைத் தேடி வருவதாகவும், அவர்கள் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.