ஒரு கலைஞனின் வேண்டுகை!

இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான் ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை.
நாம் இந்த உலகுக்குச் சொல்ல வேண்டிய ஆயிரம் கதைகள் எம்மிடம் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

எமக்கு ஏன் சினிமா தேவை?

எம்மிடம் உள்ள வாழ்வியல், பேச்சு மொழி என்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். இதை எம் இன்னொரு சந்ததிக்கு கடத்தவோ அல்லது எம் வாழ்வியலை இன்னொரு சமூகத்தக்கு காட்டவோ எம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சினிமா மட்டும் தான்.

எமக்கிருக்கும் பிரச்சனை இங்கு தயாரிப்பாளர்கள் இல்லாமையே.

உங்களது 10 டோலரால் அல்லது 1000 ரூபாவால் ஒரு இனத்தின் சினிமா கட்டமைக்கப்படும் என்றால் ஏன் இந்த முயற்சியை ஒரு சில நிமிடங்கள் செலவழித்துப் படித்துப் பார்க்கக் கூடாது.?

“சிறு துளி பெரு வெள்ளம், ஊர் கூடி ஒரு தேரை இழுப்போமா ? ”

அன்புக்குரிய எனதன்புத் தமிழ் உறவுக்கு வணக்கம்,

இம்மடலூடாக உங்களோடு பேசிக் கொண்டிருப்பது ஈழத்தில் தீவிர திரைச் செயற்பாடுகளில் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் மதிசுதாவாகும்.

என்னுடைய இலட்சியம் யாதெனில், தனக்கென பண்பாட்டையும் கலையையும் கொண்டிருக்கும் பல நாடுகளும் அது சார்ந்த இனங்களும் தமக்கென்று ஒரு சினிமாவை தமக்குரிய தனித்துவத்துடன் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் தமிழுக்கென்று உலகில் அடையாளப்படுத்தக் கூடிய சினிமாத் தளம் இல்லை. உலகின் எந்த மூலையில் தமிழன் என்று சொன்னாலும் அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் ஆனால் சினிமா என்று வரும் போது தமிழ்நாடே அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழுக்கு அடையாளம் கொடுத்தது போல திரைக்கும் நாமே அடையாளத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் இலட்சியமாகும்.

ஆவணப்பட உருவாக்கலில் ADVANCE DIPLOMA கற்கையை நோர்வே அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட நான் இதுவரை ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் 15 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளேன். கனடா, அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் எனது குறும்படங்கள் விருதுகள் பெற்றிருப்பதுடன் இவை தவிர பங்களாதேஷ், துருக்கி , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் தெரிவாகித் திரையிடப்பட்டும் உள்ளது. (அவ் விபரங்களை மடலின் இறுதிப்பகுதியில் இணைக்கிறேன்.)

இம்மடல் மூலம் தங்களிடம் அன்பாக வேண்டி நிற்பது குழுச் சேர்க்கை (Crowedfunding) மூலம் சேகரிக்கும் பணத்தில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குவதற்கான பங்கு சேர்ப்பதற்காக அம்மடலை வரைகிறேன்.

இதற்கு முன்னரும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி அப்பெரிய தொகையை சேகரிக்க முடியாமல் அப்பணத்தை உரியவரிடம் மீள அளித்திருக்கிறேன் (சிலர் அப்பணத்துடன் மீள இதில் இணைந்தும் இருக்கிறார்கள்)

வாக்குறுதிப் பட்டியல்

1)       இப்படைப்பானது இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுபெற்று படப்பிடிப்பு அனுமதி பெறப்பட்ட கதையுடனேயே ஆரம்பிக்கப்படுகிறது.

2)       படப்பிடிப்புக்கு 10 நாட்கள் ஒதுக்கப்படுகிறது படத்தைப் பூரணப்படுத்த 6 மாத காலங்கள் தேவைப்படும்.

3)   பங்களிப்பாளர் இடக்கூடிய மிகக் குறைந்த பங்குகளின் பெறுமதி ஆயிரம் ரூபாய்கள் ஆகும், (வெளிநாட்டில் இருந்து பங்கெடுப்பதானால் 10 அமெரிக்கன் டொலர்களாகும்)

4)       மொத்த பட்ஜெட் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். முழுமையான பட்ஜெட் விபரம் பத்திரத்தின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

–          முன்னாயத்த வேலைக்கு 100,000

–          படப்பிடிப்பை மேற்கொள்ள 850,000

–          படப்பிடிப்பின் பின்னான பட உருவாக்கத்திற்கு 900,000

–          விருது மற்றும் விநியோகத்திற்கு 1,000,0000



5)       தேவையான பங்குகள் எண்ணிக்கை 2,850

(இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு படத்தை முழுமைப்படுத்தத் தேவையான குறைந்த பட்ச பட்ஜெட் தொகையாகும். இதைவிட 500 பங்குகளாவது அதிகமாகக் கிடைக்குமாக இருந்தால் படத்தை இன்னும் மெருகூட்ட இலகுவானதாக இருக்கும்)

6)       இப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் உடன்பாடிருந்து தர விரும்பினால் தர விரும்பும் பங்கின் எண்ணிக்கையை மட்டும் தெரியப்படுத்தினால் போதுமானதாகும் பணத்தை இப்போது தரத் தேவையில்லை. காரணம் இதே முயற்சியில் முதலும் ஒரு தடவை பகிரங்கமாக இறங்கி பெரிய தொகை என்பதால் சேர்க்க முடியாமல் போய் சேர்த்த தொகையை அவரவர்க்கு மீள அளித்திருந்தேன்.. இம்முறை மொத்த தொகைக்கான வாக்குறுதிகள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே பகிரங்கத்தில் அறிவித்துப் படவேலை ஆரம்பமாகும் அதன் பின்னர் பணத்தை எனக்கு அனுப்பினால் போதுமானதாகும்.

7)       முன்னர் பணம் சேர்க்கும் போது இருந்த அதே நிர்வாகக் குழு தான் இப்படத்திற்கான பணச் சேர்ப்பிலும் அப்படியே இயங்குகின்றது. காரணம் இதன் வெற்றியில் கிடைக்கும் பணத்தில் அப் பெரிய பட்ஜெட் படத்தை இயக்குவதே எம் ஆவலாகும்.

8)       பங்குதாரருக்கு மீள் அளிப்பதற்கான வாக்குறுதி

–          ஒரு பங்கை மட்டும் இடுபவருக்கு 2 நுழைவுச் சீட்டுக்களோ (இலங்கையில்) அல்லது

–          படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன் ஒரு டீவீடியோ (வெளிநாடு உள்ளடங்கலாக) அல்லது

–          அவர்களது பணமோ மீளளிக்கப்படும்.

–          பண மீளளிப்பு படம் வெளியிடப்பட்டு 6 மாத காலத்தில் தான் மீளளிக்கப்படும்.

9)       இப்படைப்பில் என் பங்காக ”தர்மா” குறும்படத்துக்காக எனக்கு கிடைத்த பரிசுத் தொகையான ஐம்பது ஆயிரம் ரூபாய்களை இட்டு 50 பங்குகளை நானும் வாங்கி இணைந்து கொள்கிறேன். ஆனால் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருப்பதால் இந்த பட்ஜெட் தொகையில் எனது சம்பளமாக எதையும் இட்டுக் கொள்ளவில்லை..

10)   முதலீட்டாளரின் பணத்துக்கு மேலதிகமாக வரும் பணத்தில் இருந்து எனது சம்பளமாக 10 இலட்சம் ரூபாயை எடுத்துக் கொள்கிறேன்.

11)   பட வருவாயில் அடுத்த படத்தையும் நானே இயக்குவதாக இருந்தால் இந்தச் சம்பளத் தொகைக்கு மேலதிகமாக எப்பணமும் எனக்குத் தேவையில்லை ஆனால் வேறு யாருக்காவது இரண்டாவது படத்தை இயக்க சந்தர்ப்பம் அளிப்பதாக இருந்தால் எனது சம்பளத் தொகைக்கு மேலாக வரும் வருவாயில் 30 வீதத்தை எனது அடுத்த படத்துக்கான முதலீடாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

(மேற்குறிப்பிட்ட சம்பள விடயம் பெரிய அளவில் தெரியலாம் ஆனால் உங்கள் பணத்துக்கு மேலதிகமாக வரும் பணத்திலேயே எடுக்கப்படும் என்பதுடன் ஏற்கனவே கைவிடப்பட்ட படம் உட்பட சில இலட்சங்கள் கடனுடன் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படத்தில் களம் இறங்குகிறேன். எனது வருவாய்க்காக இருக்கும் சொந்த வேலையை முழுமையாகக் கை விட்டு சினிமாவுக்குள் இறங்குவதாலேயே மேற்குறிப்பிட்ட வார்த்தையை முன் வைக்கிறேன். காரணம் அடுத்த படம் ஒன்று கிடைக்கும் வரை இப்பணம் தான் என் வாழ்க்கைச் செலவுக்கானதாகும்.)



12)   இப்படத்துக்கான பங்கு முதலீட்டாளர்கள் இரண்டாவது படைப்பில் இணைந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களின் இப்படத்துக்கான பங்கு எண்ணிக்கையுடன் இப்படத்தின் வருவாய்த் தொகையில் அவர்களது பங்குக்குரிய இலாபமும் சேர்த்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது படத்தின் வருமானத்தில் அவர்களுக்கும் பங்கு அளிக்கப்படும். ஆனால் முதல் படத்துடன் விலகும் பட்சத்தில் அவர்களது முதலீட்டுத் தொகை மட்டுமே அளிக்கப்படும்.

பிரதான வாக்குறுதி –  இங்கு முதலிடப்படும் பணத்துக்கு முழுப் பொறுப்பாளி இயக்குனரே ஆகையால் படம் வென்றாலும் தோற்றாலும் அத்தனை முதலீட்டாளரது பணத்தையும் தனது சொந்தப்பணத்திலாவது எடுத்து மீளளிக்க வேண்டிய பொறுப்பாளி இயக்குனரே ஆவார். அப்படி மீளளிக்காத பட்சத்தில் பங்கு இட்டவர்களது சட்டரீதியான நடவடிக்கையையும் இயக்குனர் எதிர் கொள்ள வேண்டும்.



நன்றிச் செதுக்கலுடன்                                   தொடர்புக்கு

அன்புச் சகோதரன்                         0094773481379 (Viber / Whatsapp)

மதிசுதா                                   mathisuthakaran@gmail.com



அன்பு வேண்டுகை – இம்மடல் படிக்கக் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கோப்பை தங்கள் நண்பர்கள் எவருக்கேனும் பகிர்ந்துதவுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன். சிறு துளி தான் பெரு வெள்ளமாக உருவெடுக்கும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.