வாருங்கள் போராடுவோம் !

கூட்டுஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், அரசாங்கத்திலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு தாம் தயார் என அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”இலங்கையிலேயே பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்குதான் குறைந்த அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. இன்று வெள்ளவத்தையிலிருந்து புறக்கோட்டைக்கு ஆட்டோவில் வருவதாக இருந்தால்கூட 500 ரூபாவுக்கு அதிக தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே, அடிப்படை சம்பளமாக 500 ரூபாவை பெறும் எம் தொழிலாளர்கள் எவ்வாறு வாழ்வது? காலத்துக்கு காலம் மட்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்து பேசாமல், அப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டும்.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது உரையின்போது தெரிவித்த சில கருத்துகளை நாம் ஏற்கின்றோம். ஆனால், சில விடயங்களை ஏற்கமுடியாது.

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு தற்போது தனிவீடுகள் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும் சில உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இவையெல்லாம் இந்த அரசின்கீழ்தான் நடக்கின்றன.

கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமொன்று தொழிலாளர்களிடம் ஒரு முகத்தையும், முதலாளிமார் சம்மேளனத்திடம் மற்றுமொரு முகத்தையும் காட்டுகின்றது.

எனது தாயும் மலையில் கொழுந்து பறித்தவள். தொழிலாளர்களின் வலி, வேதனை என்னவென்பது எனக்கு தெரியும். எனவே, அவர்களை ஒருபோதும் ஏமாற்றவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டேன்.

பெருந்தோட்டங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். உரம் உள்ளிட்ட நிவாரணங்களை அரசாங்கம் வழங்கவேண்டும்.

தற்போதைய நிலை தொடருமானால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு தோட்டங்களில் வேலைசெய்ய ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்.

கூட்டுஒப்பந்த பேச்சில் தொண்டமானே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார். என்ன நடக்கின்றது என்பது ஏனைய தொழிற்சங்கங்களுக்கு தெரிவதில்லை.

அதேவேளை, கூட்டுஒப்பந்த பேச்சிலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேறினால், நானும் அரசிலிருந்து வெளியேறி தொழிலாளர்களுக்காக போராட தயாராகவே இருக்கின்றேன். எமக்கு பதவிகள் முக்கியமில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.