சமூக ஊடகங்கள்.அபாயத்தின் அடையாளம்..!

ஜனநாயத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தும் முக்கிய வழிமுறை வேலை நிறுத்தம். சுதந்திரம் பெற்ற பின்னர் ஆட்சியாளர்களின் கைகளை முறுக்கி சாதித்த பல போராட்டங்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆங்காங்கே இடம் பெற்றுத்தான் உள்ளன.


அவற்றில் ஒன்று தான் கடந்த 22ஆம் தேதி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் தொடங்கிய போராட்டம்.

கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அது வரையில் எவ்விதமான பங்களிப்பும் இல்லாமல் இறப்பு வரை, அதன் பின்னர் கூட ஓய்வூதியம் பெற்ற அரசு ஊழியர்கள், இந்த ஆண்டில் தான் ஓய்வூதியத்திற்காக கணிசமான தொகையை வழங்க வேண்டியிருந்தது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பல ஆண்டாக இது போன்ற பங்களிப்பு ஓய்வூதிய முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ஊழியர்கள் சம்பளத்தில் பிடிக்கும் தொகை, அதற்கு இணையாக நிர்வாகத்தரப்ப பங்களிப்பு ஒழுங்காக தொழிலாளர் சேம நல நிதி அமைப்பில் போய்சேருகிறதா என்று சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கடந்த காலத்தில் தெரியாது. தற்போதுள்ள நவீன முறைகளால் அவை எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்டாலும், அது ஆத்ம திருப்தி அளிக்குமே தவிர ஏதேனும் மாறுபாடு இருந்தால் ஊழியரால் நடவடிக்கை எடுக்க முடியாது. நாளை பெறப்போகும் ஓய்வூதியத்தை விட இன்று பார்க்கும் வேலை முக்கியம் என்பது ஊழியரின் உணர்வுகளை முடக்கிவிடும்.

இதற்கு இணையாக அரசு ஊழியர்களின் நிலையும் மாறிவிட்டது. அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பல கோடி ரூபாய் எங்கே சென்று பதுங்கியது என்று யாருக்கும் தெரியவில்லை. ஓய்வு பெற்ற நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறவில்லை. இது போன்ற சூழ்நிலையில் தான் பென்ஷன் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக பங்களிப்பு ஓய்வூதியமே வேண்டாம் என்று கோரிக்கையுடன் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் களம் இறங்கினர். இந்த போராட்டத்தை வளர்த்ததிலும், அதற்கு எதிராக மக்களை துாண்டிவிட்டதிலும் சமூக ஊடகங்களின் பங்கு அதிகம்.

ஜியோ இலவச சலுகை, மிஸ்ட் கால் கொடுத்து பழகிய தமிழர்களை சமூக அக்கரை கொண்டவர்களாக மாற்றியது. அதன் பலன் ஜல்லிக்கட்டு போராட்டதின் வெற்றி. அதன் பிறகு அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு எதிர்ப்பு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் ஆளுமை செய்தது. இதில் ஜாக்டோ–ஜியோ போராட்டமும் விதி விலக்கு அல்ல. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழுக்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தி அதனை வலுப்படுதியது. அதே நேரத்தி்ல் தன் பிள்ளையுடன் தனி நபராக சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபர் பற்றிய தகவலை உலகம் முழுவதும் பரப்பி போராட்டத்திற்கு எதிரான கருத்தையும் சமூக ஊடங்கள் உருவாக்கின. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிலைப்பாட்டை எடுத்தனர். அரசுக்கு ஆதரவாக அது இருந்ததால் அவர்களும் இதை ஊக்கபடுத்தினர்.

இதன் விளைவு வேதாரண்யத்தில் மாணவரே மற்றவர்களுக்கு பாடம் நடத்தினார். வையம்பட்டி அருகே பொதுமக்கள் 3 ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தினர். இப்படி ஆங்காங்கே மக்கள் களம் இறங்கி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிராக ஆப்பு வைத்தனர். இந்த சூழ்நிலையில் போராட்டம் பிசு பிசுக்க தொடங்கி உள்ளது.

இதுவரையில் எந்தவிமான போராட்டம் நடந்தாலும், மக்கள் அதனை வேடிக்கை பார்ப்பார்கள், அல்லது மனதுக்குள் புழுங்கியபடி கடந்து செல்வார்கள். முதல்முறையாக எதிரான நடவடிக்கையில் களம் இறங்கியது ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும் அதற்கு சமூக ஊடகம் அளித்த தைரியம் தான் காரணம் என்பது அபாயகரமானது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் தியரி. நவீன கோயபல்ஸ் போல உருவெடுத்துள்ள சமூக ஊடகங்கள் சமூதாயத்தின் அபாயம். அதை கருவிலேயே முறைப்படுத்துவது நல்லது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.