ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான
வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்க சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் து. ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணை 27 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.
இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், 21.08.2018 அன்று தவணையிடப்பட்டு, அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடைபெற்று, 2018.10.30 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்பு குறித்த நாளில் இடம்பெற்ற விசாரணைகளினைத் தொடர்ந்து 07.01.2019 ஆம் நாளுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.