பாடுநிலாவே - பாகம் 17

காங்கேசனையும் பகலவனையும் கண்டதும் சாதனாவின் மடல் விரித்த குழிகள் குளமாகியது. அவள் பட்டுக்கன்னத்தில் தானே கைதொட்டு நீரை வழித்தான் காங்கேசன். கண்களால் தம்பியை எச்சரித்த பகலவன், செல்லமாய் முறைத்தான். அண்ணனைக் கண்டும் காணாதது போல பாவனை செய்த காங்கேசன் தன் கருமமே கண்ணென செயல்புரிந்தான்.

அவர்கள் இருவரையும் அமருமாறு கூறிவிட்டு தன் அருகில் நின்ற பெண்ணிடம், ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு இவர்களிடம் திரும்பினாள் சாதனா.
“ அண்ணா, நீ முதல்ல சாதனாவைப்பாரு, அப்புறமா மத்ததெல்லாம் பேசலாம்” என்றான்.
“சரி சரி” என்றபடி தனது பணியை ஆரம்பித்ததான் பகலவன்.

“அது ஒண்ணும் பிரச்சினை இல்லை, நாளைக்கே கிளினிக்கில கொண்டுபோய் பாத்திடுவோம், அதுக்கப்புறம் ஆகவேண்டியதைப் பாக்கலாம்,” என்றான்.

“ஏன் நாளைக்கு, இன்னிக்கே கூட்டிப்போகலாம்” என்ற காங்கேசனை இடைமறித்த பகலவன், “டேய், ஒருநாள்ள, என்னடா ஆகப்போகுது?” என்றான்.
“அதுக்கில்லடா, அது” அவன் இழுக்க, அவசரமாய் இடைமறித்த சாதனா, “ அண்ணா சொல்றது சரிதான்டா, நாளைக்கே போகலாம்” என்றாள்.
மெனமாய் நின்ற காங்கேசனைக் கண்டதும் கண்சிமிட்டிச் சிரித்தான் பகலவன்.

நேரம் போனதே தெரியாமல் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். காலைத்தேநீர், காலை உணவு, அடுக்கடுக்காய் வந்தது, சாப்பிடும் போது அவளை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டான் காங்கேசன். காங்கேசனுக்கு சாதனா மீதுள்ள பாசத்தைக் கண்டு பிரமித்துப் பார்த்தான் பகலவன்.
மதியம் நெருங்கிய பொழுதில் இருவரும் புறப்பட்டனர்.

"போகவா?" எனக்கேட்டபடி அவளருகிலேயே நின்றான் காங்கேசன்.

காங்கேசனுக்கு சாதனாவைப் பிரிந்துவர விருப்பமே இல்லை. அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பகலவனுக்கு. ஆனாலும் என்ன செய்ய, அரைமனதாகப் புறப்பட்டனர் இருவரும்.

அவ்வேளை, அவளருகில் வந்த பகலவன், “சாதனா, அம்மா அப்பாவுக்கும் எனக்கும் கூட நீ எங்க வீட்டுப் பொண்ணுதான்னு தோணும், என் தம்பிக்கு, சொல்லவே வேணாம், பேசாம வீட்டுக்கே வந்திருக்கலாம், இந்த சந்தோசம் எப்பவும் கிடைச்சிருக்கும்” என்றான்.

“பரவால்ல அண்ணா, கிட்டவே இருந்தா மனக்கசப்பு ஆயிடும், இதுதான் எனக்கு நல்லது” என்றவளை இதுக்குமேல என்ன சொல்ல என நினைத்தபடி விடைபெற்று நடந்தான்.

மறுநாளே சாதனாவிற்கான சிகிச்சைகள் ஆரம்பமானது, காங்கேசனும் தாயாரும் பகலவனின் முறைப்பெண்ணான கானகியும் கூடவே இருந்தனர். உடனேயே சிகிச்சைகளை ஆரம்பித்த பகலவன், இரண்டே வாரத்தில் அவளுக்கான சத்திர சிகிச்சையை செய்துவிட்டான். அதன் முடிவு எப்படி இருக்குமோ என்ற தவிப்பு அனைவருக்கும் இருந்தது.
அன்றுதான் சாதனாவிற்கு கண்கட்டு பிரிக்கப்பட இருந்தது.

தொடரும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.