சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு வர முன்னர் 5 ட்ரக்குகளில் வந்திறங்கிய பொருட்கள்!

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இஸ்லாமாபாத்திற்கு செல்லவுள்ளார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு காரணங்களினால் திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 5 பாரவூர்திகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று (திங்கட்கிழமை) இஸ்லாமாபாத்தை சென்றடைந்தன. இதனிடையே, சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி ஊடகவியலாளர்களும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.
முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தரவிருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.
சவுதி இளவரசரின் இந்தமுறை விஜயத்தின் போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். அதேவேளை, இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.