சாஹலும் மனிதன்தான்; ரோபோட் இல்லை: முரளிதரன்!

ஆஸ்திரேலியாவுடனான நான்காவது ஒருநாள் போட்டியில், சாஹலின் சுழற்பந்து வீச்சில் ஆஸி 80 ரன்கள் அடிக்க, சாஹலும் மனிதர் தான் ரோபோட் இல்லை, என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 10 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 358 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தாலும், இந்திய அணியால் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை.
 இதற்கு முக்கிய காரணம், பந்துவீச்சில் இந்திய அணி சொதப்பியது தான் என்றும் குறிப்பாக சாஹலின் பந்துவீச்சின் மீதும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் சாஹலுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் இலங்கை நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாஹலும் மனிதன் தான், ரோபோட் இல்லை, என்று கூறினார்.
மேலும், "ஒவ்வொரு முறை அவர் பந்துவீச செல்லும்போதும், ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். முக்கியமாக கடந்த இரண்டு வருடங்களாக மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எதிர்முனையில் விளையாடுபவர்களை வீழ்த்துவதற்கு பல திட்டங்களை வைத்துள்ளார். ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவர் மீது விமர்சனம் எழுப்ப கூடாது. அவர் ஒன்றும் ரோபோட் இல்லை" என்றார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.