கிளிநொச்சியில் படையினரின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பெற்றோர் விசனம்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.  குறித்த முகாம் கழிவுகளை ஓர் இடத்தில் குவிப்பதனால் துர்நாற்றம் வீசுகின்றது. இதேவேளை பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவற்றை எரிப்பதனால் பாடசாலை சூழல் மாசடைவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலை பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் இவ்வாறு துர்நாற்றம் காணப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். விசேட பாடசாலை நாளான இன்று  பாடசாலைக்கு பெற்றோர் சென்றிருந்த சமயம் நச்சுமருந்து கலந்த வித்தியாசமான காற்றை சுவாசித்தது போன்ற உணர்வு காணப்பட்டதாக பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.  பாடசாலை சூழலை மாசுபடுத்தும் வகையில் படையினர் முகாம் அமைத்துள்ள பகுதியில் அண்மை நாட்களாக துர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில் தானும் உணர்ந்துள்ளதாகவும், பல பெற்றோர், மாணவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்த பாடசாலை முதல்வர், இவ்விடயம் தொடர்பில் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். யுத்தம் நிறைவின் பின்னர் பாடசாலை காணி மற்றும் விளையாட்டு மைதான காணிகளில் முகாம் அமைத்துள்ள படையினர் கடந்த ஆண்டளவில் ஒருபகுதி காணியை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட காணியில் தரம் 4,5 வகுப்புக்கள் நடார்த்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலைக்கான இட நெருக்கடி காணப்படும் நிலையில் படை முகாமை அகற்றி பாடசாலையின் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படையினரின் இவ்வாறான செயற்பாடு தொடர்பில் பாடசாலை சமூகமும், பெற்றோரும் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு தரமான பாடசாலை சூழலை ஏற்படுத்தி தருமாறும், படையினர் வசமுள்ள பாடசாலை காணியை விடுவித்து பௌதீக வள பற்றாக்குறைகளை சீர் செய்து தருமாறும் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.