சிதைக்க துணிந்த வேடதாரிகள்..!!

வேடதாரிகள்

வேடதாரிகள் யாரென்று
புரியாத விசித்திரமான
உலகத்தில் விம்மிஅழுகிறது
நடாற்ற இந்த அகதியின் மீது
மோதி அழும் காற்று!

அந்த ஒற்றைவிரலின் ஆற்றலில்
முள்ளிவாய்கால் வரை பிடரி நிமிர்த்தி
புரட்சி பாடிய குயில்களெல்லாம்
இப்போது நரைவீழ்ந்தபுரட்சியில்
இரைமீட்கும் இடியமீன்களாய்
கரை காண இயலாத மாலுமிகளாய்
நுரைதள்ளும் கடலில் தத்தளிக்கிறார்

தலைவன் காட்டிய வழியில்
தலை நிமிர்ந்து நடக்கமுடியாத
உடல்வலு குறைந்த ஊனப்பிறவிகளெல்லாம்
பத்து வருடமாகியும் இன்னும்
அடுத்தவனை குறைசொல்வதிலே
காலம் கழிகிறது.

முள்ளிவாய்காலில் வீரியம் மிக்க
ஆயுதப்போராட்டம்
அமைதியாகிய அடுத்த கணமே
தியாகங்கள் கனவுகளை
சிதைக்க துணிந்த வேடதாரிகள்
இன்று
அவர் இல்லை என்பதில்
அதீத அக்கறை காட்டுகிறார்களே தவிர
அவர் வகுத்த விடுதலைப் போராட்டத்தை
வலுப்படுத்த வக்கில்லாத சப்பாணிகளாய்
இருப்பதை எண்ணி
வெட்க்கப்படாது.
இன்னும்
வியாக்கியானம் செய்வதில்
இவர்களின்
செயல் வீரம் இருக்கிறது.

எவனோ ஒருத்தன்
எமக்காக போராடும்போது
அவனை பலிக்கடா ஆக்குவதிலும்
அவனின் தியாகத்தில் புகழ்ச்சியின்
உச்சநிலையை அடைவதிலும்
தீவிரமாய் இயங்கிய சருகுப்புலிகள்!

இன்று
கறையான் வேடமணிந்து காணிநிலத்து கட்டையை அரித்து
கொட்டுவதில் தீவிரமாக இருப்பதில்
என்ன பயனோ தெரிவில்லை

நிறைவாக ஒருகேள்வி
தலைவர் இருந்தால் என்ன செய்யப்போகின்றீர்
இல்லையென்றால் என்ன
செய்யப்போகின்றீர்

எங்களைப்பொறுத்தவரையில்
அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அவரே எங்கள் வழிகாட்டி திசைகாட்டி

முடிந்தால்
இனத்தின் உரிமைக்காக குரல்
கொடு
இல்லையேல்
சுருண்ட புழுவாய்
மடிந்து போ
எங்களை கடிந்து
காலத்தை
வீணடிக்காதே..

மே18 நெருங்க நெருங்க
மேதாவிகளெல்லாம்
இனி வரிசை கட்டி வருவார்
பத்து வரிசமா
இதே பிழைப்பாய் போச்சு

✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.