வடக்கில் பல உயிர்களை பலியெடுத்த DAN TV !!

டான் டிவி குழுமத்தின் கேபிள் டிவி நிறுவனமான (ASK) ஆஸ்க் கேபிள் விசன், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களை பயன்படுத்தி கேபிள் டிவி இணைப்பினை வழங்கியதனை இன்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமது நிறுவனத்திற்கு  என தூண்களை தற்போதே தாம் நிறுவுவதாக டான் செய்தி ஊடாக குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, தாவடி சங்கானை வரையான வீதி மற்றும் யாழ்ப்பாணம் கண்டி வீதிகளில் தற்போது கேபிள் இணைப்புக்களை வழங்கும் நோக்கில் (ASK) ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனம்  தூண்களை நிறுவுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் தமது இணைப்புக்களுக்கான தூண்களை தற்போதே நிறுவுவதாக (ASK) ஆஸ்க் கேபிள் விசன் தெரிவித்திருக்கின்ற நிலையில், 2013ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களை பயன்படுத்தி கேபிள் டிவி இணைப்பினை வழங்கியமை உறுதிப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் வரும் வீதியோரங்களில் கேபிள் தூண்களை  நிறுவுவதற்கு யாழ் மாநகரசபையின் அனுமதியினை பெற வேண்டுமென செய்தி வெளியிட்டுள்ள டான் டிவி செய்திப்பிரிவு, அவ்வாறான அனுமதியின்றி  எவ்வாறு யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியிலிருந்து தமது தொலைக்காட்சியினை கேபிள் ஊடாக ஒளிபரப்புகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தத் தவறியுள்ளது.

இந்த நிலையில், இது வரை 5 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்க் கேபிள்  விசன் நிறுவனத்தின் சட்டவிரோத கேபிள் இணைப்பிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக  யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றை நடாத்தி வந்த கரவட்டியை சேர்ந்த 58 வயதுடைய மயில்வாகனம் ஜெகநாதன்  ஆடுகளுக்கு குழை வெட்டிய போது வேலியில் இருந்த   டான் டிவி குழுமத்தின் (ASK) ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனத்தின் வயரில் கடத்தப்பட்ட மின்சாரம் தாக்கியதால் கடந்த ஆண்டு மே மாதம் 23 ம் திகதி ஸ்தலத்திலேயே  மரணமடைந்துள்ளதாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனது தந்தை மரணமடைந்தது தெரியாத அவரின் மகனான 31 வயதுடைய விஞ்ஞானதுறை பட்டதாரியான ஜெகநாதன் சஞ்சீவன் தந்தையை தூக்க முனைந்த போது மின்சாரம் தாக்கிய அவரும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

தந்தையும் அண்ணனும்   மின்சாரம் தாக்கி பலியானது தெரியாது ஜெகநாதனின் மற்றொரு மகனான கானகன் இருவரையும் தூக்க முனைந்த போது வேலியில் இருந்த (ASK) ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனத்தின் கேபில் இணைப்பு வயரில் கடத்தப்பட்ட மின்சாரம் தாக்கியபோதும் தெய்வாதினமாக அயல் வீட்டவர் அவரை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல்லியடி காவல்துறை பிரிவில் இடம் பெற்ற குறித்த இருவரின் மரணத்துடன் தொடர்புடையவரான குகநாதன் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத  நிலையில், கரணவாய் பகுதியின் ஆஸ்க் கேபில்  விசன் நிறுவனத்தின் கேபிள் இணைப்பு வழங்குனர் மற்றும்  தொழில்நுட்பவியலாளர்கள்  மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை மின்சார சபையின் மின்கம்பங்களில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகவே ஆஸ்க் கேபிள்  விசன் நிறுவனம் கேபிள் வயர்களை இணைத்துள்ளதாக மின்சார சபையினர் தெரிவிக்கின்றனர்.

(ASK) ஆஸ்க் கேபிள் விசன் நிறுவனத்தின் உரிமையாளரும் சட்டவிரோத கேபிள் இணைப்புக்களால் பலரது மரணங்களுக்கு காரணமானவருமான எஸ்.எஸ். குகநாதன் மீது நெல்லியடி காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காததால் குறித்த காவல்துறையினர் மீதும் தமக்கு சந்தேகம் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

நன்றி
ENT

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.