இயல்போடு பயணிக்க22உண்மைகள்

எப்போதும் தனித்தன்மையோடு இருங்கள், நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!
* தனி மனிதர்களின் ஆட்சிக்குள் ஒடுங்கி விடாதீர்கள், ஆனால் பிற மனிதரின் தனித்துவத்திற்கும் மதிப்பளியுங்கள்!
* எந்த ஒரு குழுக்களிற்குள்ளும் முடங்கி விடாதீர்கள், அதற்காக எவரையும் புறக்கணித்து ஒதுக்காதீர்கள்!
* எந்த ஒரு சம்பிரதாயத்திற்குள்ளும் உட்பட்டு விடாதீர்கள், அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து பாருங்கள்!
* எந்த ஒரு மதவெறிக்குள்ளும் ஆட்பட்டு விடாதீர்கள், மனித மனங்களைப் பகைக்காது புன்னகை புரியுங்கள்!
* உங்கள் இயக்கத்தை பிறர் தீர்மானிக்க இடம் கொடுத்து விடாதீர்கள், இரகசியங்களைப் பகிர்ந்து பின் அடிமையாகி விடாதீர்கள்!
* பிறரிடம் உண்மையாக இருங்கள் பிறர் அவ்வாறே இருக்க வேண்டுமென எதிர் பார்க்காதீர்கள்!
* எல்லோர் பேச்சையும் அமைதியாக செவிமடுங்கள், ஆனால் முடிவுகளை நீங்களே எடுங்கள்!
* உங்கள் உள்ளுணர்வில் நம்பிக்கை கொண்டிருங்கள், சமுதாயத்தில் நல்லுறவைப் பேணுங்கள்.
* யாருக்கும் தனிப்பட்ட உடமையாகி விடாதீர்கள், யாரையும் உங்களுக்கும் உடமையாக்க முனையாதீர்கள்!
* மற்றவர்களின் அனுபவங்களில் கற்றுக் கொள்ளுங்கள் அதையே உங்கள் வாழ்கையாக மாற்றி விடாதீர்கள்!
* அடையாளப் படுத்திக் கொள்வதில் 👉அதீத விருப்பம்  கொண்டிருக்காதீர்கள்,
போதை தரும் விடயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்!
* கிடைக்கும் புகழ்ச்சியில் நிறைவுகொண்டு விடாதீர்கள், வளர்ச்சியின் எல்லையைத் தீர்மானிக்காதீர்கள்!
* எவ்வளவு உயரம் சென்றாலும் எங்கிருந்து, எப்படி வந்தோம் என்பதை மறவாதீர்கள், இறுக்கமற்ற மனநிலையில் தெளிவாக இருங்கள்!
* உங்கள் தனித்தன்மையில் பிறர் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், பிறரின் அந்தரங்க விடயங்களைப் பேசி சுகம் காணாதீர்கள்!
* உரிமை கொண்டாடுபவர்களால் கவரப்படாது இருங்கள் ஆனால் அவர்கள் மீது கருணை கொண்டிருங்கள்!
* பூவின் மென்மை போன்று தூய அன்பு காட்டுங்கள், புயலின் தன்மை போன்று எதையும் வெல்லுங்கள்!
* அனைத்து செயல்களிலும் நுண்ணுணர்வுடன் கூடிய விழிப்புணர்வு பெற்றிருங்கள்!
* நற்செயலையும், நேர்மையையும் உங்கள் இயல்பான தன்மையோடு ஒன்றிணைத்துக்  கொள்ளுங்கள், அடிக்கடி சுய கணிப்பீடு செய்து உங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்!
* பிறர் வாழ்வில் ஒட்டுண்ணியாய் இராது சுய முயற்சியால் பயன் பெறுங்கள், பிறருக்கு உதவுங்கள் உதவியவரை மறவாதீர்கள்!
* மற்றவர்களின் ஆற்றல், அனுபவங்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள், தலைக்கனம் தவிருங்கள்!
* நீர்க்குடங்களில் முகம் காட்டும் நிலவாக இருங்கள், குடங்களுக்கு சொந்தமாகி விம்பத்தோடு ஒன்றிவிடாதீர்கள்!👈

அன்புடன் 💜கரிணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.