ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் போர்க்கொடி!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு, போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி, நிர்வாகச் செயல்திறன் குறைபாடு போன்ற காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த மூன்று காலாண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கும் பெரிதும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே, பணியாளர்களுக்கான சம்பளத்தை காலம் தாழ்த்திக் கொடுப்பதால் பணியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியைச் சந்தித்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்டுகள், விமானப்பணியாளர்கள் என அனைவருக்கும் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான சம்பளங்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, பைலட்டுகளின் அமைப்பான நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்ட் (NAG), ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வரும் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் அனைத்து பைலட்டுகளுக்கும் சம்பள பாக்கியைக் கொடுக்க வேண்டுமென்றும், தொடர்ந்து அடுத்து வரும் மாதங்களில் மாதத்தொடக்கத்திலேயே தரப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதிக்குள் சம்பள பாக்கியைத் தர வேண்டுமென்று கடந்த மார்ச் மாதத்திலேயே நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்ட் கூறியிருந்தது. பின்னர், காலக்கெடுவை ஏப்ரல் 14 என்று மாற்றியமைத்தது. இனியும் சம்பள பாக்கி பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பெரிய இழப்புக்கு உள்ளாகக்கூடும். ஏற்கெனவே விமான சேவையைக் குறைத்துவரும் காரணத்தால் பயணிகள் மற்ற நிறுவன விமான சேவைக்கு மாறிவருகிறார்கள். இந்தச் சிக்கலிலிருந்து ஜெட் ஏர்வேஸ் எப்படி மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.