பதறவைக்கும் தேவாலய குண்டுவெடிப்பு!!

இன்று உலகம் முழுவதிலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அந்தோணியர் தேவாலயத்தில்தான் முதலில் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஒரு தேவாலயம் போன்றவற்றிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

இவை மட்டுமல்லாது கொழும்புவில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதை தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவின் பல்வேறு பகுதிகளில் நடந்த தாக்குதலில் இதுவரை 42-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயிரிழப்பும் இன்னும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.


இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ‘ இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நிலைமையைக் கேட்டறிந்து வருகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள் மற்றும் உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் இது பற்றி கூறும் போது, ‘ நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இலங்கை முழுவதும் தொடர் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் யாரும் அதிகமாகக் கூட வேண்டாம் என அந்நாட்டு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவசர தேவைகளை தாண்டி வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். விமான நிலையங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த கோர தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க் கட்சி தலைவர் ராஜபக்‌ஷே போன்ற தலைவர்கள் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.