இலங்கையில் ஊடகத்துறை தொழில்வாண்மையானதாக எப்போது அங்கீகரிக்கப்படும்?

இந்தக் கேள்வியைப் பல வருடங்களுக்கு முன்னர், இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராகவிருந்த கலாநிதி ரங்க கலன்சூரியவிடமும் முன்வைத்திருக்கின்றேன்.
அப்போது தாம் அதற்காக வெட்கப்படுவதாகக் கூறினார். எல்லோரும் இணைந்து இதற்காக உழைக்க வேண்டு்ம் என்றார். இன்னமும் அப்படியே...அரசின் கடனுக்குக் கையேந்தும் நிலை!

கடந்த இரு தினங்களாகப் பன்னாட்டு இதழியல் மாநாடு என்ற பெயரில், யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் தினகரன் சார்பில் நானும் ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், பிரதி ஆசிரியர் அருள் சத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டோம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொடர்பியல் துறைப் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன், பேராசிரியை மீனாட்சி பாரதி, சென்னைப் பல்கலையின் தொடர்பியல் துறை மாணவ, மாணவிகள் முதலானோர் கலந்துகொண்டி ருந்தார்கள். அவர்களுடன் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவி கலைமகள் தலைமையிலான குழுவினரும் வந்திருந்தார்கள். பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தவிரவும் கலாநிதி ஆறு திருமுருகன், பாதுகாவலன் ஆசிரியரான அருட்தந்தை ஏன்சிலி றொஷான் அவர்கள், யாழ் எப்.எம்.கட்டுப்பாட்டாளர் முருகேசு ரவீந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த மாநாடு பற்றி நிறைய எழுதலாம்.. எழுதலாம் என்றிருக்கின்றேன்.

அதற்கிடையில், இலங்கையில் ஊடகத்துறை ஒரு தொழில்வாண்மை Profession ஆக அங்கீகரிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை மாநாட்டில் முன்வைத்திருக்கின்றேன் என்பதை ஊடகத்துறை நண்பர்களுக்குச் சொல்ல வேண்டும். என்னதான் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படித்தாலும் அந்தப் படிப்புக்கு ஓர் அங்கீகாரம் இல்லாத நிலையே இருக்கிறது. இதுபற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொண்டாலும், இலங்கையில் அரசாங்கத்திடம் கடன் வாங்கும்; கையேந்தும் நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆளுநரும் வெட்கப்படுவதாகக் கூறினார். அதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

உண்மையில் நமது நிலைவரம் தெரியாமல் நாம் மற்றவரைக் கேள்வி கேட்கின்றோம். நமக்குக் கொம்புகள் இருப்பதாக எண்ணிக்கொண்டி ருக்கின்றோம். நாட்டின் அரசியலை மாற்றப்போகின்றோம் என்று மார்தட்டுகிறோம். இதற்கு முதலில் நாம் வெட்கப்பட வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  ஊடகத்துறை Profession ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்த நிலை இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும்?
இன்னும் மூடை மூடையாய் விடயங்கள் உண்டு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.