தனுசு ராசி விகாரி வருட ராசிபலன்கள் 2019-2020!

விகாரி வருட ராசிபலன்கள் 14.4.2019 முதல் 13.4.2020 வரை
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே,யோ,ப,பி,பு,பூ,பா,ன,டே,பே உள்ளவர்களுக்கு)

ஐப்பசி 11-க்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசும்!




தனுசு ராசி நேயர்களே,

விகாரி வருடம் தொடங்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அவரோடு சனி மற்றும் கேது ஆகிய 2 கிரகங்களும் இணைந்திருக்கின்றார்கள். அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரித்து வருடத்தொடக்கம் ஆரம்பமாகின்றது. சப்தம ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். எனவே எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகின்றது.



கோடிநலம் தரும் குரு பகவான் ஆரம்பத்தில் உங்கள் ராசியில் இருந்தாலும், பிறகு விருச்சிகத்திற்கு மாறிச் சென்று விடுகின்றார். விருச்சிகம் விரய ஸ்தானமாகும். எனவே விரயங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். முறையான பலனும், முன்னேற்றமும் ஐப்பசிக்கு மேல்தான் கிடைக்கும். அப்பொழுது குரு பகவான் மீண்டும் தனுசு ராசிக்குச் செல்கின்றார்.



ராசிநாதன் ராசியில் சஞ்சரிக்கும்பொழுது யோசிக்காது செய்த காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வருடத்தொடக்கத்தில் செவ்வாய் 6-ம் இடத்தில் இருப்பது யோகம் தான். 6-ல் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை 12-ம் இடத்தில் பதிகின்றது. 12-ம் இடம் செவ்வாய்க்குரிய வீடாகும். எனவே உடன்பிறப்புகளால் உங்களுக்கொரு நன்மை கிடைக்கும்.



ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். 9-ம் இடத்திற்கு அதிபதி 5-ம் இடத்தில் உச்சம்பெறுவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவையெல்லாம் உங்களுக்கு சிறப்பாகக் கிடைக்கும். ஜென்ம கேது 7-ல் ராகு இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.



இந்த ஆண்டு தொடங்கும் பொழுது ஏழரைச் சனியில் ஜென்மச்சனி தொடங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது. எப்பொழுதுமே ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றால் நிம்மதி கிடைக்காது. நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகாது. எல்லாவற்றிற்கும் வடிகாலாக நீங்கள் செய்த புண்ணியம் குரு பகவான் உங்கள் வீட்டிலேயே சஞ்சரிப்பது தான். அதுமட்டுமல்லாமல் குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது.



சனி உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். இரண்டாமிடம் என்பது தன ஸ்தானமாகும். 3-ம் இடம் என்பது சகாய ஸ்தானாமாகும். அப்படிப்பட்ட ஆதிபத்யங்களைப் பெற்ற சனிபகவான் ஏழரைச்சனியில் 2-வது சுற்றாக வருவபர்களுக்கு எந்தத் தீமையும் ஏற்டாது. முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடந்தால் கூடுதல் கவனம் தேவை.



குறிப்பாக விரயங்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப ரகசியங்களை 3-ம் நபரிடம் சொல்வதன் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் முன் ஒருகணம் யோசித்து செயல்படுவதுதான் நல்லது.



தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

இக்காலத்தில் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. சொந்த வீட்டில் சஞ்சரித்து குரு பார்க்கும் பொழுது வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும். தடைகற்கள் படிக்கற்களாக அமையும். புத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செய்த பரிகாரங்களுக்கு பலனாக இப்பொழுது புத்திரப்பேறு கிட்டும். பூர்வீக சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்  காட்டுவீர்கள்.



குருவின் பார்வை பலத்தால் எதிரிகள் உதிரியாவர். எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். குறிப்பாக வெளிநாட்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் எண்ணியது போல காரியங்கள் கைகூடும். பழைய நகைகளைக் கொடுத்து விட்டுப் புதிய நகை வாங்கி அணிந்து அழகுபார்க்கும் சூழ்நிலை உருவாகும்.



வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைக்கும்.



தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும். முன்னோர்கள் கட்டிவைத்த ஆலயத்திருப்பணிகளை முறையாகச்செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். பங்காளிப் பகை மாறும். பயணங்களுக்கு ஏற்ற விதத்தில் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். புதிய பாதை புலப்படும். காரியத் தடைகள் அகலும்.



விருச்சிக குருவின் சஞ்சாரம்(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிக ராசிக்குள்ளேயே உலாவருகின்றார். இதன் பலனாக 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. நலம் தரும் 4-ம் இடம் புனிதமடைவதால் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறப்போகின்றது. மாலைசூடும் வாய்ப்புகளும், மகிழ்ச்சியான சம்பவங்களும் இல்லத்தில் நடைபெறப் போகின்றது. போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் கூடும்.



6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கடன் சுமை குறையப் புதிய வாய்ப்புகளும் உருவாகும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வேலையில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். பணி நிரந்தரமாகாதவர்களுக்கு இப்பொழுது பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்து சேரும். பணி நீக்கம் செய்யப்பட்டுப் பலமாதங்களாக வீட்டில் இருந்தவர்களுக்கு இப்பொழுது மீண்டும் அழைப்புகள் வரலாம். வரும் வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொள்வது நல்லது.



மேலும் பழைய வாகனங்கள் பழுதாகி, பழுதாகி மனதை வாடவைக்கின்றது என்று கவலைப்பட்டவர் களுக்கு இப்பொழுது புதிய வாகனம் வாங்க முன்பதிவு செய்வீர்கள். பிறமொழி பேசும் நண்பர்களால் நன்மை கிடைக்கும்.



தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர் களைச் சேர்த்துக்கொள்வீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும்
அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.



வெளிநாட்டில் பணிபுரிவதற்காக சென்று தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்லவர்களின் தொடர்பால் நலமும் கிடைக்கும், வளமும் கிடைக்கும். வீடு, இடமாற்றங்கள் உத்தியோக மாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நேரமிது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.



சனியின் சஞ்சார நிலை

ஆண்டுமுழுவதும் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். எனவே சனியின் பார்வை பதியும் இடங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். 3, 7, 10 ஆகிய மூன்று இடங்களிலும் சனியின் பார்வை பதிகின்றது. எனவே உடன்பிறப்புகள் வழியே உதவிகள் கிடைக்கும். கடன்சுமை தீர அவர் களது ஆலோசனை கைகொடுக்கும்.



எதிர்பாராத விதத்தில் இல்லத்தில் திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பிய காரியங்களை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். பயண வாய்ப்புகள் பலன்தருவதாக அமையும்.



இக்காலத்தில் சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களான திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கு வாய்ப்பிருக்கும்பொழுது சென்று வழிபட்டு வருவது நல்லது.



ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். இதன் விளைவாக சர்ப்ப தோஷம் உருவாகின்றது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கைதான் உங்களுக்கு அமையும்.



ஒருதொகை கரைந்த பிறகே அடுத்ததொகை உங்கள் கரங்களில் புரளும்.

இன்பமும், துன்பமும் கலந்து வரும் இந்த நேரத்தில் இன்பங்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.



மனஅமைதி கொஞ்சம் குறையலாம். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கையும் குறையும். பொதுவாக இக்காலத்தில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் விரயங்களிலிருந்து தப்பிக்க இயலும்.



சனி செவ்வாய் பார்வைக்காலம்(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. செவ்வாய் 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். இவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதன் மூலம் பிள்ளைகளால் தொல்லை ஏற்படும். பிரச்சினைகள் அதிகரிக்கும். இடம் வாங்கியதை விற்க நேரிடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மறுப்பர். கடன் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.



பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தப் புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாகவே இருக்கும். வரும் மாற்றங்களும் நல்ல மாற்றங்களாகவே வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அப்பொழுதுதான் மனஅமைதி கிடைக்கும்.



சுபகாரியப் பேச்சுக்கள் ஐப்பசிக்கு மேல் முடிவாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு கட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் வாய்ப்புகள் கைகூடலாம். தொழிலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்படலாம். சர்ப்ப தோஷத்திற்கான கிரக அமைப்பு இருப்பதால் நிரந்தமாக நீங்கள் எந்த முடிவும் எடுக்க இயலாது. தடைகளும், தடுமாற்றங்களும் இடைஇடையே வரலாம்.



பிள்ளைகளால் பிரச்சினை ஏற்பட்டு அகலும். பொன். பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். தாய் மற்றும் சகோதரர்களின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் வரலாம். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களும் பலன்தரும்.



வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு

செல்வ வளம்பெருக சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது. அனுமன் கவசம் பாடி வழிபடுவதோடு வெற்றிலை மாலையும் சூட்டலாம். திசைமாறிய குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.