ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம்!

பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அலைகழிக்கும் ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தினர்.


டெல்லி விமான நிலையத்துக்குள் இன்று மாலை கூடிய விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தமத கோரிக்கைகளை முன்வைத்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விமானப் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை நிலுவையை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேய்ஸ் நிர்வாகம் உள்ளது.

அவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேய்ஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட திகதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிரளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேய்ஸ் இயக்குநர் குழுமத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.

நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் இவர்களுக்குச் சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடனளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யும் பணியில் இறங்கியுள்ளன.

இதற்கிடையில், ஏப்ரல் முதல் திகதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேய்ஸ் விமானிகள், தங்கள் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்து வரும் 15ஆம் திகதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் குதிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, இன்று தமது போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.