இராணுவத்தினரிடம் தண்ணீர் கேட்டு அழுதோம்:மறக்க முடியுமா??

அதிகாலை பொழுது என்றபடியால் நிலம் வெளிக்காமல் இருந்தது.இரவு முழுவதும் நித்திரையை தொலைத்து ஏக்கத்தோடு காத்திருந்தோம் விடியும் பொழுதிற்காக.

பல போராளிகளிற்கு பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு உள்ளார்கள் என்பதே தெரியாமல் இருந்தது,பல போராளிகளின் குடும்பங்கள் வெளிமாவட்டங்களிலேயே இருந்தனர்,

இராணுவத்தினரிடம் சரணடைந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை,சரணடைவது பிரச்சனை இல்லை, பிடிபட்டபின் நிகழப்போகும் சம்பவங்கள் விபரீதமாக அமைந்துவிட்டால் என்ன செய்வது..?

அதனால் ஒருவித பயம் எல்லோர் மனதிலும் தொற்றிக்கொண்டது,எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஏங்கியபடி நெஞ்சழுத்தத்தோடு தவித்துப்போய் சரணடைவதா..?விடுவதா என்ற ஏக்கத்தோடு இருந்தோம்,

எமக்கான முடிவை இயற்கையே தேடித்தந்தது,எதிர்பாராத விதமாக இராணுவம் ஏவிய செல் ஒன்று வீதியில் நின்ற ஒரு வாகனத்தின் மீது வந்து விழுந்தது,அந்த வாகனமும் வெடிமருந்துகளுடன் நின்றபடியால் எல்லாமே வெடித்துச்சிதறத் தொடங்கியது,

எரிமலை வெடித்து தீப்பிளம்பு கக்குவதுபோல தீயின் வெளிச்சம் வானைப்பிளந்தது,இறுதியாக வட்டுவாகல் ஒளிமயமாக எங்கும் காட்சி தந்தது.

தீயின் சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது,தீ நம்மை துரத்தத்தொடங்கியது.செல் விழுந்ததற்கு முன்பகுதியில் இருந்த மக்கள் முன்னோக்கி அவலக்குரல்களை எழுப்பியவாறு இருட்டுக்குள் தம் உறவுகளை கூப்பிட்டவாறு ஓடத்தொடங்கினார்கள்,

நாம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தெரிந்துகொண்டோம் நாம் இராணுவத்தின் பகுதிக்குள் வந்துவிட்டோம் என்று,தீப்பிளம்பு எம்மை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துச்சென்றது,இராணுவத்திடம் வந்துவிட்டோம்.இனி என்ன நடக்கப்போகுதோ என்ற ஏக்கம் பயம் தொற்றிக்கொண்டது,

அருகில் இருந்த எம் மக்கள் எம்மை அரவணைத்துக்கொண்டார்கள்,உடைகள் தந்தார்கள்,மாற்றிக்கொண்டு மக்களோடு மக்களாக நடக்கத்தொடங்கினோம்,

நாங்கள் நடக்கவில்லை தள்ளுப்பட்டே சென்றுகொண்டிருந்தோம்,இரண்டு கால்களிலும் காயப்பட்ட போராளி ஒருவன் இரண்டு கைகளின் விரல்களிற்கும் இடையில் செருப்பினைக்கொழுவி தனது வக்பகுதியால் உண்ணியபடி முன்னோக்கி வந்துகொண்டிருந்தான்,

இன்னொரு நேரமாக இருந்திருந்தால் ஓடிச்சென்று என் போராளித் தம்பியை தாங்கியிருப்பேன்,என் நிலை அப்படி இருக்கவில்லை.நானே இன்னொருவரின் துணையுடன் வந்துகொண்டிருந்தேன்.

அவனிற்கு உதவமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடு முன்னோக்கி சென்றுகொண்டிருந்தேன்,முதல்நாள் அளவில் இராணுவ பகுதிக்குள் வந்தவர்கள் செல்பட்டு வீதியெங்கும் இறந்துகிடந்தார்கள்.உப்புக்காற்றிற்கு உடல் பருத்துக்கிடந்தது.விலத்தி விலத்தி நடந்து பாலத்தை அடைந்துவிட்டோம்,

பாலத்தின் இருபக்கங்களிலும் கற்பாறைகள் எங்கும் எம் மக்களின் உடல்கள் மிதந்தது.சிறுவர்கள் பெண்கள் உடல்களே அதிகம் தோல் எல்லாம் வெளுத்து வெள்ளையாக உடல்கள் குப்புறமிதந்தபடி இருந்தது.எம் மக்கள் உயிரை காப்பதற்கு ஓடிவந்து இறுதிப்பகுதியில் மரணித்திருந்தார்கள்

எல்லாவற்றையும் தாண்டி நான்கு பக்கமும் சுற்றி போடப்பட்ட இராணுவத்தின் முற்கம்பி வேலிக்குள் சென்றுவிட்டோம்,பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்கம்பிக்குள் தஞ்சமடைந்தோம்,

பசியில் தண்ணீர்தாகத்தில் சிறுவர்கள் வயோதிபர்கள் என்று வாய்விட்டு அழுதார்கள், இராணுவத்தினரால் வாகனம் ஒன்றில் கொண்டுவந்து விஸ்கற் சிறிய தண்ணீர் போத்தல்கள் மக்களை நோக்கி எறியப்பட்டது,மேல் படத்தில் காட்டியதைப்போல் எல்லோரும் கைகளை நீட்டினோம்,

ஒரு சிலரிற்கே கிடைத்தது,என்ன செய்வது அப்படியே வெய்யிலுக்காக முகத்திற்கு துணியைப்போட்டுவிட்டு வெட்டவெளியில் படுத்துவிட்டோம்,மூன்று நாட்கள் கம்பிக்குள் இருந்தோம்,

இன்றைய நாளில் எல்லாம் நாங்கள் முற்கம்பி வேலிக்குள்ளேயே இருந்தோம்,

மூன்றாம்நாள் சிறுசிறு தொகையாக  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கூட்டிற்குள் சென்று உடமைகள் உடல்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது,ஆம்  துகிலுரியப்பட்டு சோதனைசெய்யப்பட்டோம்,

வெட்கப்பட்டோம் அவமானப்பட்டோம் என்ன செய்வது எம்நிலையில் என்ன செய்யமுடியும்..? வாகனத்தில் ஏற்றப்பட்டோம் எங்கு போகிறோம் என்று தெரியாமல்

வாகனத்திற்குள் வைத்து இரண்டு நாட்களின்பின் 20ரூபா விஸ்கற் சிறிய தண்ணீர் போத்தல் தந்தார்கள்.இரண்டு நாட்கள் முழுமையாக சாப்பிடாமல் இருந்தபடியால் வாங்கி சாப்பிட்டோம்.

எனது ஆசையெல்லாம் இந்த செல்சத்தம் கேட்காத தூரத்திற்கு சென்றுவிடவேண்டும் என்றே இருந்தது,செல்லிற்கு இறந்த மக்களைப்பார்த்துப்பார்த்தே செல் என்றாலே ஆள்விழுங்கி என்றானது.நாங்கள் இராணுவ பகுதிக்கு வந்துவிட்டோம் ஆனால் வட்டுவாகல் உள்பகுதியில் வெடியோசைகள் கேட்டவண்ணமே இருந்தது,

வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டு ஓமந்தையில் இறக்கப்பட்டோம்,அங்கு ஒலிபெருக்கியில் தமிழில் இராணுவத்தால் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தனர்

ஆம் போராளியா இருந்தாலென்ன இயக்க நிறுவனங்களில் ஒரு நாள்வேலை செய்தாலும் வந்து பெயர் விபரங்கள் பதிந்துவிட்டு செல்லுங்கள் என்ற அறிவிப்பே அது.

பதியச்சென்றவர்கள் வேறுவழியாக வாகனங்களில் ஏற்றப்பட்டு முகாம்களிற்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,பெற்றோர் இருவரும் பிள்ளைகளை இருக்கும்படி சொல்லிவிட்டு பதியச்சென்றபோது அவர்கள் முகாம்களிற்கு ஏற்றப்பட்டதால் பிள்ளைகள் தனித்துப்போன கதைகள் என்று பல அரங்கேறியது,

பொதுமக்கள் புறம்பாகவும் போராளிகள் புறம்பாகவும் வெவ்வேறு முகாம்களிற்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,அண்ணளவாக ஒன்றரை வருடத்தில் இருந்து இரண்டு வருட முட்கம்பி வாழ்க்கை கிடைத்தது.

ஒரு உடையுடன் பல மாதவாழ்க்கை கழிந்தது.உண்ண உணவின்றி தூங்க வசதியின்றி நோய் நொடிகளோடு காயங்களிற்கு மருந்தின்றி பலதரப்பட்ட துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தோம்,

**பிரபாஅன்பு**

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.