தேர்தல் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி காளியம்மாள்!!

2019ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமையவிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 38 தொகுதிகளில் (வேலூர் தொகுதி வாக்குப் பதிவு நிறுத்திவைக்கப்பட்டதால்) 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணியே வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவில் கவனிக்கத்தக்க ஓர் அம்சமாக, நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள். 50 சதவிகிதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது பலராலும் பாராட்டப்பெற்றது. அவர்களில் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாளின் பேச்சு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. தாம் சொல்ல வந்ததைத் தெளிவாகவும் செறிவாகவும் பேசுபவர். இதனால், பொதுமக்களிடம் எளிதாகச் சென்றடைந்தார். நேற்றைய தேர்தல் முடிவில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 60,515. சதவிகிதத்தின் அடிப்படையில் என்றால், 6.33.

காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினம். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைக்க, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து வேட்பாளராகவும் ஆனவர். நாகையைச் சேர்ந்த அவர், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்ட அனுபவங்களைப் பற்றிக் கேட்க தொடர்புகொண்டோம்.

``உங்களின் 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பதைப் பற்றி?"

``முதலில், எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. உடன் நின்று உழைத்தவர்களுக்கும் நன்றி. 60,000 பேரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்பதே பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதற்கு ஏற்றவாறு என் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன். நான் பொதுவான வாக்குறுதிகளாக இல்லாமல், கருத்தியல் அடிப்படையில் செய்ய முடிகிற வாக்குறுதிகளைக் கொடுத்தேன். வீடு வீடாகச் சென்றும், தெரு முனை பிரசாரங்கள் என்றும் வேறு வேறு வடிவங்களில் மக்களைச் சென்றுசேர முடியுமோ அவற்றையெல்லாம் பின்பற்றினோம். என்னிடம் தானாக வந்து, `நல்லா பேசறீங்க, உண்மையா பேசறீங்க... எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்' என்று சொன்னவர்களின் எண்ணிக்கையே ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கும். ஆனால், அந்தளவு வாக்குகளாக மாறவில்லை என்பதுதான் வருத்தமே! வெளியூரிலிருக்கும் பலர்கூட, `எங்களுக்கு வட சென்னையில ஓட்டு இருந்தா உங்களுக்குத்தான்' என்றார்கள். இன்னும் கூடுதலான வாக்குகளை எதிர்பார்த்தோம்"

``நீங்கள் அடைந்திருக்கும் இந்தத் தோல்வி..."

கேள்வியை முடிப்பதற்குள்..." இந்தத் தோல்வி என்னை எதுவும் செய்துவிடாது. வழக்கம்போல அரசியல், சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடத்தான் போகிறேன். ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று பார்க்காமல், மோடி வர வேண்டுமா... வேண்டாமா என்றுதான் பார்க்கிறார்கள். எங்களுக்கு ஓட்டு போட்டால், பா.ஜ.க வந்துவிடுவதற்கு மறைமுகமாக உதவிவிடுவோம் என்றும்கூட சிலர் நினைத்திருக்கலாம். உங்கள் தொகுதியின் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய, அவற்றிற்குப் போராடக்கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதானே சரி. நான் அப்படி இருப்பேன் என்று சொல்லிதான் மக்களிடம் வாக்கு கேட்டேன்"


``திராவிடக் கட்சிகளை தவிர்த்தவர்களின் வாக்குகளையெல்லாம் மக்கள் நீதி மய்யம் பிரித்துக்கொண்டதா?"

``ஆமா,  அவர்களும் கணிசமான வாக்குகள் வாங்கியிருந்தார்கள். அதேநேரம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சென்ற தேர்தலை விடவும் அதிகரித்திருப்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்" 

``தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க கூட்டணி 39 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது பற்றி?"

``தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளில் இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர்த்து, மூன்று இடங்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. அவற்றில் நாங்களும் வருவோம் என நினைத்தோம். தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதை நான் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தின் பிரச்னைகளுக்காக இவர்கள் எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்."

``மத்தியில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது பற்றி உங்கள் கட்சி என்ன நினைக்கிறது?"

``எங்கள் தலைவர் சீமான் சொன்னதுதான், 'இடைத்தேர்தலில் தோற்பதுபோல காட்டிவிட்டு, பொதுத்தேர்தலில் வென்றுவிடுவார்கள்."  வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்தளவு பாதுகாப்பாக இருந்தன என்பது பற்றியெல்லாம் பல கேள்விகள் இருக்கின்றன."
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.