பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி பிரன்சிஸ் யோசப்!!📷
பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி பிரன்சிஸ் யோசப் அடிகாளாரும் 50 வருட கால குருத்துவப் பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.
இறைவழியில் நின்று உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக் கொண்டார். காணாமல் போனோர் பட்டியலில் அவரது பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவரது இருப்பு கேள்விக் குறியானாலும் தமிழரின் வரலாற்றில் அவர் தனித்துவமான ஒரு இடம் பிடித்தவர்.
இவ் அருட்பணியாளரின் வாழ்வில் சில பதிவுகள்:-
2009 மே 13ஆம் திகதி காலை நேரம், முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் ரணகளமாய் மாறியிருந்தது.
திரும்பும் திசையெல்லாம் சடலங்களும், அங்கவீனர்களும், ஒபாரிகளும், கூக்குரல்களும், பற்றியெரியும் வாகனங்களும். 12ஆம் திகதி நள்ளிரவு தொடங்கி 13ஆம் திகதி அதிகாலை வரை நடத்தப்பட்ட பல்குழல், ஆட்லறி, கநோன் எறிகணைத் தாக்குதல்களின் எச்சங்கள்தான் இவைகள்.
ஒரு சில மணித்தியாலங்களில் ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டும், கொல்லப்பட்டும் கிடந்தார்கள். அன்றைய தினம் மதிய நேரம், அருட்பணியாளர் பிரான்சிஸ் அடிகளாரை சந்திப்பதற்காக அவரின் பதுங்கு அகழிக்கு சென்ற போது அவருடன் அவரது பணியாளர்களும், கால் ஊனமுற்ற ஒரு பெண்ணும் இருந்தார். நாங்கள் உள்ளே இருந்து உரையாடிக் கொண்டிருந்த போது, மீண்டும் எறிகணைத் தாக்குதல்கள் சரமாரியாக மேற்கொள்ளப்பட, நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு சில மீற்றர் தள்ளியிருந்த எண்ணைக் களங்சியம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
எங்கும் தீச்சுவாலை, அதன் வெக்கை உள்ளே இருந்த எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது கையில் கிடைத்த துணிகளைச் சுற்றி தண்ணீருக்குள் தோய்த்து உடல் வெக்கையை தணித்துக் கொண்டிருந்தோம். பதுங்கு குழியை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு எறிகணைகள் எம்மைச் சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன.
இதுதான் எங்களின் இறுதி சந்திப்பு என்பதை அன்று நான் உணரவில்லை. ஆனால் இன்று அது நிதர்சனமாக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் பிரான்சிஸ் அடிகளார் பல விடயங்களை மனம் விட்டு பேசினார். உரையாடல் முடிவில் அவரை எங்களோடு வந்து இருக்கும் படி கேட்டபோது, அவர் இரண்டு காலும் ஊனமுற்ற பெண்ணைக் காட்டி, ''நான் உங்களுடன் வர ஆயத்தம் ஆனால், இந்த பெண்ணையும் கொண்டு வந்து உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை'' என்று உருக்கமாகவும் நிதானமாகவும் கூறிய வார்த்தைகளால் நாம் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல விரும்பவில்லை.
இவர் சுட்டிக் காட்டிய அந்தப் பெண் இவரிடம் ஆங்கிலம் பயின்ற ஒரு மாணவி. அந்தப் பெண்ணை பார்த்த போது, அவளுக்கு முன்னாலே நீலநிற பேசின் ஒன்றிற்குள்ளே இரண்டு பின்னங்கால்களையும் இழந்த அவரின் செல்லப் பிராணியான பூனைக்குட்டியும் காணப்பட்டது.
அடிகளார், கிளிநொச்சி அம்பாள் குளம் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து ஆன்மீக, சமூகப் பணி ஆற்றிக் கொண்டு இருந்தவர். தாய் நாட்டின் மீதும் , மக்களின் விடுதலை மீதும் அதீத ஆர்வம் கொண்ட இவர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னர் தமிழ் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் தன்னுடைய கல்வித்துறை அனுபவத்தாலும் போர்க்கால சமூக கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டிருந்த பல கல்வி சார்ந்த துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்தவர். வன்னியில் தமிழ் இளையோரினது ஆங்கில மொழி புலமைக்கு வித்திட்டு, நீண்ட நாள் கனவாகிய ஆங்கில மொழிக் கல்லூரியை 2004 கிளிநொச்சியில் பிறப்பெடுக்கச் செய்து தனது ஆங்கில மொழிப் புலமையினாலும், நீண்டநாள் கல்வித்துறை அனுபவத்தினாலும் இக்கல்லூரியை திறம்பட இயக்கி, ஆங்கில மொழிப் பட்டாதாரிகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
கடின உழைப்பும், விடா முயற்சியும் கொண்ட இவர் மக்களின் வாழ்வியலின் துன்பமான வரலாற்றுத் தடங்களுடன் தன்னை இரண்டற இணைத்துக் கொண்டார். இடப்பெயர்வு என்ற போரியல் சுழற்சிக்குள்ளே தர்மபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு, இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என பல்வேறு குறிச்சிகளை தாண்டி, போரின் இறுதிக்காலம் வரை துன்பப்படும் மக்களோடு இருந்தார். ஏழ்மையை வாழ்வாக்கியவர், உதவி என்று தேடிச் செல்வோரை அன்போடு அரவணைத்து மனம் கோணாமல் உதவி செய்வார்.
இவர் வள்ளிபுனம் பிரதேசத்தில் இருந்த போது குருத்துவத்தின் 50வது வருட நிறைவை உடையார்கட்டு தூய யூதாததேயு ஆலயத்தில் 2008 மார்கழி 21ஆம் திகதி ஏனைய குருக்களோடும், மக்களோடும் சேர்ந்து மிகவும் எளிமையான முறையிலே கொண்டாடினார். 50வருட குருத்துவ பயணத்தில் இறைவனின் துணையோடு வரலாற்றில் பல சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.
இடப்பெயர்வின் தாக்கம் இவரின் உடலிலும் பலவிதமான நோய்களை ஏற்படுத்தத் தொடங்கியது. உடல் பலவீனம், கண்பார்வை போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்தவராக, தனது இயலாமையிலும் உறுதியாக பல பணிகளைப் புரிந்தவர். எந்த வேளையிலும் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாதவர். இவர் அகோர எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டு இறை துணையால் பாதுகாக்கப்பட்டவர்.
ஒருமுறை உடையார்கட்டு ஆலயத்தில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது எறிகணைத் தாக்குதலுக்குள் எல்லோரும் சிக்குண்டு இரவு வேளையில் சிதறி ஓடும் போது, கைத்தாங்கலாக இவரை அழைத்துச் சென்றது இன்னும் எனது நினைவில் உள்ளது. பல தடவைகளில் உந்துருளியில் இவரை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்கள் செய்யும் போது, தான் நடந்து, கடந்து வந்த வாழ்வியல் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். இவர் எமது கடந்தகால வரலாற்றை நன்கு அறிந்திருந்த இறை பணியாளர் என்பதை புரிந்து கொண்டேன்.
இவரது கண்களில் ஒன்று சத்திட சிகிச்சை செய்யப்பட்டு குணப்படுத்த வேண்டிய கட்டாய தேவை இக்காலப் பகுதியில் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேறினால் தான் மீண்டும் திரும்பி வர முடியாது போனால் தனது பணிகள் பாதிப்படையும் என்று நினைத்தவராக, ஆரம்பத்தில் மறுத்தாலும் காலப்போக்கில் இவரது பார்வை மேலும் மேலும் குன்றிப்போக பார்வையை இழக்க நேரிடும் என்ற அபாயத்தை உணர்ந்தவராக அங்கிருந்து வெளியேற விரும்பிய போது, அதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இவரின் பயணத்திற்கு சாதகமாக அமையவில்லை. இவரை அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றுவதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுத்த போதும் எதுவும் பயனளிக்கவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் நல் மனதோடு ஏற்றுக் கொண்டார்.
2009 மே 13ஆம் திகதி அவரை விட்டு நான் பிரியும் போது இனம் புரியாத பயம் ஒன்று எனது மனதில் இருந்தது. தனித்து விடப்படுகிறாரே என்று எனது உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வேளையில் ''கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் ஒருமுறை சந்திப்போம்'' என்று அவரது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் என்னை சற்று ஆறுதல் படுத்தியது. அந்த இடத்திலிருந்து அவர் அன்றைய தினமே வெளியேறி இன்னுமொரு இடத்தில் பாதுகாப்பு தேடிய இவர் மே மாதம் 17ஆம் திகதி வட்டுவாகல் பாலத்தை தாண்டி பல இலட்சக்கணக்கான மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் சென்றார்.
களைப்பு, சோர்வு அவரது உடல் இசைவாக்கத்திலே தளர்ச்சியை ஏற்படுத்த ஓர் மரநிழலின் கீழ் தன்னுடன் இருந்த தனது பணியாளர்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தார். பலர் அவரை அடையாளம் கண்டு தங்களின் சோகங்களை அவரோடு பகிர்ந்து கொண்டனர்.
இவரின் பிரசன்னத்தை அங்கு கண்ட அரசியல் துறையைச் சேர்ந்த சிலர், மே 18 காலை வேளையில் இவரை அணுகிச் சென்று தங்களை அடையாளப்படுத்தி, இராணுவத்தினரிடம் சரணடைய தமக்கு உதவி புரியும் படி கேட்டுக்கொண்டார்கள். அடிகளாரின் ஆங்கில மொழிப்புலமை சரணடைதலுக்குரிய ஒரு சுமூகமான சூழ் நிலையை உருவாக்கும் என்பதையும், அவர் ஒரு குருவானவர் என்பதால் இராணுவத்தினர் இவருக்கு மதிப்பளிப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.
தாராள உள்ளத்தோடு மனம் கோணாமல் உதவி செய்யும் மனம் படைத்தவர் இவர், இதற்கு இசைந்து அதனை செயற்படுத்துவதற்கு இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் சரணடைதலுக்கு சம்மதித்து சரணடைபவர்களின் பெயர் பட்டியலை ஆயத்தம் செய்யும் படி கேட்டுக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே தங்களை அடையாளப் படுத்தினாலும், அடிகளாரின் அந்த முயற்சியை அறிந்த இன்னும் பலர் அங்கு ஒன்று கூடி குடும்ப சகிதம் தங்களின் பெயர் விபரங்களை அப்பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சிலருடன் ஆரம்பித்த பெயர்ப் பட்டியல் மிகவும் நீண்ட பட்டியலாக மாறியது. இறுதியில் அந்த பெயர் பட்டியலை பெற்றுக் கொண்ட அதிகாரி, அவர்களுக்கென விசேட பேருந்து வண்டிகளை ஒழுங்கு செய்து, அவற்றில் ஏற்றிய பின்னர் அடிகளாரையும் அந்த போராளிகளோடு ஏற்றிச் சென்றார்கள்.
இந்த சம்பவங்களை பலர் கண்டுள்ளார்கள். அடிகளாரின் இருப்பு இப்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது. அடிகளாரோடு அந்த பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர்களும், காணாமல் போனோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது.
பிரான்சிஸ் யோசப் முள்ளிவாய்க்கால் என்ற, உலகப் பந்தில் ஒரு சிறு புள்ளியில் மக்களின் துன்பியலோடு தங்களின் இருப்பைக் கரைத்துக் கொண்டவர்கள். இறுதிக் காலத்திலும் இறைபிரசன்னத்தை மக்களுக்கு கொடுத்தவர்கள்.
காற்றோடும், கடலோடும், மண்ணோடும் கரைந்து போன பல்லாயிரக் கணக்கான மக்களோடும் தங்களின் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர்கள். வரலாற்றில் உங்களின் தடங்களை என்றும் நாம் நினைவில் கொள்வோம்
கருத்துகள் இல்லை