முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி)!!📷

"நாங்கள் வாங்கருக்க இருந்ததால் தப்பினாங்கள்,  நீங்கள் போய் கொஞ்சத்தில ஆமி வந்திட்டான். வரேக்க சுட்டுக்கொண்டுதான் வந்தவன், அதிலை நிறையபேர் செத்திட்டுதுகள், எஞ்சியிருந்த பெண்களையும் கொடுமைப்படுத்தி கண் முன்னால் சுட்டுக்கொன்றான், ஒரு சிலர் மட்டும் உயிர் தப்பினம்" என்று இன்று உயிருடன் இருக்கும் அவர் கூறினார்.


.........

மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க  பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை  விட்டு உடன்  வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் மறுபுறம் என வேறுபாடற்று  மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன.எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்களை இவ்விடத்தை விட்டுப்போகுமாறு தமிழீழகாவல்துறையினர் சொல்லிக்கொண்டிருந்தனர்.

காயமடைந்த உறவுகளை தூக்கிக்கொண்டு போகவும் முடியாமல் அந்த இடத்தில் விட்டுவிட்டு  தாங்கள் மட்டும் போகவும் முடியாமல் இரத்த உறவுகள் கதறித் துடித்துக் கொண்டிருந்தார்கள்.காயமடைந்து சத்திரசிகிட்சைக்காக வரிசைப்படுத்தி வைக்கப்பட்ட நோயாளர்களை கடந்து வரும் போது காலைத்தொட்டு  கதறினார்கள் காப்பாற்றும்படி,  எம்மால் எதுவும் பேசமுடியவில்லை நாங்கள் மருத்துவ மனையைவிட்டு உயிரிருந்தும்  பிணமாக வெளியேறும் போது எனது காலை இழுத்து பிடித்து ஒரு இளம்தாய் கால்கள் சிதைந்து கிடக்க சிறு குழந்தையையும் வைத்துகொண்டு ஒரு சொட்டு தண்ணி தாங்கோ என்று கெஞ்சினாள். எதும் அறியாதவலாய் என் கால்களை களட்டமாட்டிங்கள் தானே டொக்டர் என்று கேட்க பதில் சொல்ல முடியாது தவித்தவளாய் ..

 தண்ணீருக்கு பதிலாக முதலுதவி பையிலிருந்த சேலைன் போத்தலை எடுத்துக்கொடுத்துவிட்டு நின்று கதைக்கமுடியாமல் கால் போற திசையில் வெறும் கட்டுதுணிகளுடன்மட்டும் மருத்துவமனையை விட்டு வெளியேறினோம் .அப்போது நாங்கள் சென்று சிறிது நேரத்தில் அந்த இடத்தை இராணுவம் கைப்பற்றியது .அங்கு காயமடைந்தவர்களில் தெரிந்தவர்களும் இருந்தார்கள். அவர்களிற்கான சிகிக்சை அளிக்காவிட்டால் நேரம் போகப்போகபலர் இறந்து விடுவார்கள் என்ற உண்மை கசந்தது யுத்ததின் கரும்புகைகள் முற்றமெங்கும் பரவியபடியே இருந்தது .
அந்த மருத்துவமனையில் விட்டிற்று வந்தவர்களிற்கு என்ன நடந்திருக்கும் என்ற ஏக்கத்திற்கான விடை சில நாட்களுக்கு முன்னரே  தெரிந்தது .....
எனக்கு தெரிந்த ஒரு அண்ணாவும் அவரது மனைவியும் காயமடைந்து அங்கு வந்து கிடந்தார்கள். இருவருக்கும் எழுந்து நடக்க முடியாத அளவில் காலில் முறிவும் காயமும்  இறுதியாக மிஞ்சியிருந்த சேலைன் போத்தல்களை வெட்டி தண்ணிர்கேட்பவரிடம்கொடுத்துவிட்டுவந்தோம்.

.அப்படித்தான் அவரது மனைவிக்கும் கொடுத்தபோது நாங்கள் போகப்போகின்றோம் என்பதை ஊகித்துக்கொண்டவர்கள் அமைதியாய்கிடந்தனர்  .அன்று மாலை அங்கு சென்ற அவரது நண்பன் கணவன் மனைவி இருவரும் இந்த நிலையில் இருப்பதைபார்த்து தவித்தார். தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்ற வருத்துடன் பக்கத்தில் கிடந்த ஐ வடிவ பதுங்குழியில் இருவரையும் இழுத்து விட்டிற்று நான் போறன், நீங்கள் வங்கறுக்குள்ளே இருங்கோ என்று சொல்லி  போயிருக்கிறார்.அதனால் உயிர் பிழைத்த அந்த அண்ணா சொல்லிய உண்மைகள் நெஞ்சைபிழிகின்றன "நாங்கள் வாங்கருக்க இருந்ததால் தப்பினாங்கள்,  நீங்கள் போய் கொஞ்சத்தில ஆமி வந்திட்டான்,  வரேக்க சுட்டுக்கொண்டுதான் வந்தவன் அதிலை நிறையபேர் செத்திட்டுதுகள் எஞ்சியிருந்த  பெண்களையும் கொடுமைப்படுத்தி கண் முன்னால் சுட்டுக்கொண்டான்,  ஒரு சிலர் மட்டும் உயிர்தப்பினம்" என்று இன்று உயிருடன்  இருக்கும் அவர் கூறினார்.
இது மட்டுமல்ல இதைவிட பல கொடுமைகள் எம் கண் முன்னே சாட்சியாகவுள்ளன.

மிதயா கானவி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.