பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் குரலை நசுக்கி கைது நடவடிக்கை என கருதுகிறேன்-கி. கிருஸ்ணமீனன்!!

ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டிப் பேசியிருந்தார். அதுமாத்திரமன்றி பல சிங்களத் தலைவர்கள் மற்றும் பெளத்த குருமார்கள் எனப் பலரும் தலைவர் பிரபாகரன் குறித்துப் புகழாரம் சூடிப் பெருமையாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரத்திலுள்ளவர்களுக்கு ஒரு நியாயம்? யாழ். பல்கலை மாணவர்களுக்கு வேறொரு நியாயமா? என யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கி. கிருஸ்ணமீனன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்று(03)இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சற்றுமுன்னர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக கண்காணிக்க வேண்டிய நிலையில் அநாவசியமாக விடுதலைப் புலிகளுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சம்பந்தப்படுத்தி அவர்களைக் கைது செய்து விசாரிப்பதென்பது முற்றுமுழுதாக மனிதாபிமானத்திற்கும்,சட்டத்திற்கும் முரணான செயல்.

தமிழர்களுக்கெதிராக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் குரலை நசுக்குவதன் மூலம் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் மற்றும் தமிழ்மக்களின் தீர்வுக் கோரிக்கைகளை நசுக்குவதற்கான முனைப்பாகவே பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கையை நான் கருதுகிறேன்.

ஆகவே, விடுதலைப் புலிகளின் படங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்க முயல்கிறார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.