தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள 'விக்ரம் வேதா' ஜோடி!?
இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரி தங்களது தங்களது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் - காயத்ரி. அதன்பிறகு ‘வ குவார்ட்டர் கட்டிங்’ ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். இதில் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு, விருதுகளையும் வாரி குவித்தது.

இதையடுத்து புஷ்கர்-காயத்ரி தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். வால் வாட்சர் பிலிம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர்கள், ' இளம் படைப்பாளிகளிடமிருந்து உற்சாகமளிக்கும் சில திரைக்கதைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டோம். அந்த படங்களை நாங்கள் தயாரிக்க விரும்பினோம். ஆனால் அந்த சமயத்தில், எங்களிடம் அதற்கான வளமோ அல்லது அலைவரிசையோ இல்லை. இப்போது, அதற்கான நேரம் வந்துவிட்டது’ எனப் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் புஷ்கர்-காயத்ரியிடம் முன்னாள் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹலீதா ஷமீம் இயக்கவுள்ள புதிய படத்தை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ‘ஏலே’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை புஷ்கர்- காயத்ரியுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த்தும் தயாரிக்கவுள்ளார்.
முன்னதாக ஹலீதா ஷமீம் ஏற்கனவே பூவரசன் பீப்பி என்ற படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை