புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.!!

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.
இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு தேவை. தற்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் அந்த ஒத்துழைப்பை இல்லாமல் செய்துவிட வேண்டாம்’
இவ்வாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.
பயங்கரவாதத்துக்கு அடிபணியாமல் நாட்டு மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
கொழும்பில் 01,05,2019 இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும்.
நாம் உள்நாட்டுப் பயங்கரவாதத்துக்குப் முகம்கொடுத்ததைப் போல தற்போது வெளிநாட்டு ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். நாம் சர்வதேச புலனாய்வுத் துறையினரையும் இணைத்துக் கொண்டே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.
நாம் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பிரதான காரணம், முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.
இதனை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.