முதல்வரை பாராட்டிய திமுக கூட்டணி எம்.பி!!

உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற நாமக்கல் எம்.பி சின்ராஜ், இலவச மடிக்கணினி திட்டத்தை குறிப்பிட்டு முதல்வரை பாராட்டியுள்ளார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சின்ராஜ். இந்த நிலையில் ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஜூன் 22) இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்தோடு, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் சின்ராஜும் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய சின்ராஜ், “ஏழை மாணவர்கள் பயன்பெறக் கூடிய வகையில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம்தான் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம். அது ஒரு மகத்தான திட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்ட திட்டத்தை இன்றைய சூழலில் தற்போதைய முதல்வர் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்குரியது. பள்ளி மாணவர்களுக்கு இலவச உபகரணங்களை முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வழங்கி வருகிறார்” என்று பாராட்டியுள்ளார். இது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மாச்சரியங்களை கடந்து இது போன்ற நிகழ்வுகள் வரவேற்க கூடியவையாகவே உள்ளன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.