ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதாம்..!!சமூக அலசல்!!
தண்ணீருக்காக வீதியில் கூடியிருந்தனர் சிலர். அவர்களின் எண்ணங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய கேள்விக்குறியாகவே இருந்தது. அவர்களின் எண்ணப்பயம், யதார்த்த வாழ்க்கை பற்றியதே. இது எங்கே போய் முடியுமோ என்ற அவர்களின் தவிப்பு இதோ .......
மகிழினி : பௌசர் வரநேரம் செல்லும் போல..
இசைநிலா : ஓமோம், அது சரி, நாட்டுநடப்பெல்லொம் எப்பிடிக்கிடக்கிது?
வினயா : பேப்பரும் பாக்கிறேல்ல, எங்க ஒருக்கா அதில வாசிகசாலையில எட்டிப் பாப்பம் எண்டா நேரமே கிடக்கு.
வாசுகி : நீ சொல்லுறதும் சரிதான், போனோட பொழுது போயிடுது, மற்றதுக்கெல்லாம் நேரமெங்க கிடக்கிது?
அகமதி : ஒருமாதிரி, கல்முனை மக்களின்ர போராட்டம் முடிஞ்சுது போல,
வினயா : ஞானசாரர் வந்து ஒருமாதிரி முடிச்சுவைச்சிட்டார்.
மகிழினி : ஆனாலும் நாட்டில பதட்டமும் பயமும் இருக்கத்தானே செய்யிது.
இசைநிலா : பின்ன இல்லாமலே....உந்தப் பள்ளிக்குடம் எல்லாம் நட்ட மரம்மாதிரி ராணுவம் நிக்கிறதிலயே தெரியுது தானே. பூசியிருக்கிற பெயர்அன்லவுலி உருகி ஊத்த ஊத்த நிக்கினம்.
பாமதி : உந்த பாதுகாப்பும் சோதனையும் பிள்ளையளுக்கும் ஆசிரியர்மாருக்கும் எவ்வளவு சிரமம் தெரியுமே,?
மகிழினி : அதைப்பற்றி என்ன கவலை, குண்டுத்தோசையை குண்டெண்டு பினைஞ்சு குடுக்கிற அளவுக்கெல்லே சோதனை மோசமாக் கிடக்கிது.
இசைநிலா : அது ஓய்ஞ்சாலும் இவையள் ஓயவிடமாட்டினம், எல்லாம் அரசியல் விளையாட்டுத்தான்.
வாசுகி : இப்ப தானே எதுக்கெடுத்தாலும் போராட்டமும் உண்ணாவிரதமும் எண்டு போகுது.
வினயா : அதில பகிடி என்னண்டா, எங்கட பிரச்சினைக்கு தேரர்மாரும் எல்லோ வந்து இருக்கினம்.
மகிழினி : நினைச்சாலே அதிசயம் தான், ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுகுதாம்.
அகமதி : எங்கட அரசியல்வாதிகளும் சும்மா ஆக்களே, தூக்குற கூஜாவை நல்ல உறுதியாத்தான் தூக்கிவைச்சிருக்கினம்.
பாமதி ; உதில சம்பந்தம் ஐயாவும் ஏதோ சொன்னவர் போல...
வினயா : பிறகு? அவர் சும்மா இருக்கேலுமே, ஏதாவது சொல்லத்தானே வேணும். அதுக்காக எதையெண்டாலும் சொல்லுறது தான்.
இசைநிலா : சுமந்திரனும் சும்மா இருக்கிறேல்ல, மக்களில பற்றுள்ளவர் போல காட்டறதில வலுகெட்டிக்காரன்.
மகிழினி : அரசியல் விளையாட்டு எண்டதும் எனக்கு உந்த பிக்பாஸ் தான் நினைவு வருது.
பாமதி : ஓமோம் ....ஓமோம், எங்கட தமிழ் பிள்ளையள் ரெண்டுபேரையும் எடுத்திருக்கினம் எல்லோ, அதுவும் அரசியல் விளையாட்டுத்தான்.
வினயா : இளம்பெடிபெட்டை நல்லதை, நாட்டை, அநீதியைப்பற்றி நினைக்காமல் ஓவியா....லொலிவியா எண்டு பாத்துக்கொண்டிருக்கட்டும் எண்டுதான் உந்த விளையாட்டு.
அகமதி : நேசமணியை பிரமாதமா பிரபலமாக்கி எப்பிடி அந்தநேரத்து அரசியல் சாணக்கியத்தை காட்டிச்சினமோ, அதேமாதிரி இப்ப பிக்பொஸ்ஸில காட்டுகினம்.
வினயா : ஓமோம்......அந்த யூலி எண்ட போர்க்குணம்கொண்ட பிள்ளையை எங்க எண்டே தெரியாமல் ஆக்கின பெருமை பிக்பொஸ்க்குத்தானே.
பாமதி : அதுசரி, கமலின்ர பேச்சு சாதுரியத்தில, விழுத்திறவையை விழுத்தி எழுப்பிறவையை எழுப்பிபோடுவார்.
இசைநிலா : எங்கட பிள்ளையள் எல்லே விழுகுதுகள், கேக்கிறவை கேனையள் எண்டா கேப்பையிலயும் நெய் வடியுதெண்டுதான் சொல்லுவினம்.
அகமதி . எங்கட சனத்துக்கு எங்கதான் கஸ்ரமில்லை, அலரி மாளிகையில நேர்காணலுக்கு கூப்பிட்டு அவியவைச்சு அனுப்பியிருக்கிறதிலயே தெரியுதுதானே, அரசாங்கம் எங்களுக்கு தாற சமநீதி.
இசைநிலா - ஓமோம் குடிக்கத் தண்ணியும் இல்லாமல் நட்டுநடு வெயிலில நிண்டு காய்ஞ்சுபோட்டுத்தான் வந்திருக்குதுகள் எங்கட பிள்ளையள்.
வினயா -. அதுமட்டுமே, அங்க நேர்காணல் செய்தவைக்கு தமிழ் தெரியாதாம், எங்கட பிள்ளையளுக்கு சிங்களம் தெரியாது, என்னத்தை கேட்டினமோ......
பாமதி இப்பிடி எல்லாவிதத்திலையும் எங்களை வதைக்கிறதே அரசாங்கத்தின்ர வேலையாப்போச்சு.
மகிழினி : நாங்கள் தான் உசாரா இருக்கவேணும்.
அகமதி : எங்கட உரிமையை ஒருநாளும் இவையள் தரப்போறதில்லை,
அகமதி : அப்ப தமிழரின்ர வாழ்க்கை இப்பிடியே இருட்டாத்தான் கிடக்கும் போல.
இசைநிலா : ஏன் அப்பிடிச் சொல்லுறாய், விடியும்.....விடியும், ஒருநாள் நாங்கள் எதிர்பாராதவிதமா விடிஞ்சே தீரும்.
பாமதி : அங்க பார் பௌசர் வருது, வாங்கோ எல்லாரும்.....
நகர்கிறது அந்த நங்கையர் கூட்டம்.
தமிழரசி,
ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை