எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடியின் ஜாக்பாட்!

தமிழ்நாடு சட்டமன்றம் முறைப்படி தொடங்கிவிட்டது. நாளை முதல் தீவிரமாக இயங்க இருக்கிறது. இந்த நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக திரும்பப் பெற்றது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரியதோர் அரசியல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கும் வாய்ப்பிருப்பதால் அதை நடத்தி திமுகவின் இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கணக்குப் போட்டு ஸ்டாலின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதேநேரம் சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியாத திமுக, நிச்சயம் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இப்போதைக்குக் கொண்டுவராது என்று நம்பிக்கொண்டு முதல்வர் எடப்பாடி சும்மா இருக்கவில்லை.
ஜூன் 28ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அப்போது பேசிய முதல்வர், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அங்க போறாங்க, இங்க போறாங்கன்னு பல பேர் பல செய்திகளை சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஆனால், நீங்க எல்லாரும் எப்போதும் என் பக்கம்தான் இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அதை தெரிஞ்சுக்கிட்டுதான் ஸ்டாலின் முன்வைத்த காலை பின் வைத்திருக்கிறார். அதனால் நம் ஆட்சிக்கு இனிமே பிரச்சினையே இல்லை. நீங்க சுயேச்சையா போட்டியிட்டாகூட உங்க தொகுதியில வெற்றிபெறும் அளவுக்கு எல்லாரும் இன்னும் சிறப்பா செயல்படுங்க.
உங்க ஒவ்வொருத்தர் பத்தின ரிப்போர்ட்டும் வாங்கிப் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். யார் மேலயும் எந்த குறையும் இல்ல. உங்களுக்கான தேவைகள் எதுவானாலும் என்கிட்ட கேட்கலாம். எந்த எம்.எல்.ஏ.வும் வந்து பழனிசாமியைப் பார்க்க முடியாம போனதா சரித்திரமே கிடையாது. எந்த நம்பர்ல என்கிட்ட பேசணும்னு உங்களுக்கு தெரியும். எப்ப வேணும்னாலும் பேசுங்க” என்று கூறினார் எடப்பாடி.
அதாவது ஆட்சிக்கு வந்த ஓர் ஆபத்து நீங்கிவிட்டாலும் இனியும் எந்த அதிமுக எம்.எல்.ஏ.வையும் யாரும் பேரம் பேச முடியாதபடிக்குப் பாதுகாக்கவும் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்
“ஓரிரு நாட்களுக்கு முன்னாடி மேலிடத்துலேர்ந்து மாவட்ட தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வந்திருக்கு. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறையில நடக்கும் வேலைகள் மூலமா கிடைக்கும் பெர்சன்டேஜ்ல ஒரு குறிப்பிட்ட அளவு பணம் மாசா மாசம் எல்லா அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் போகணும்கிறதுதான் அந்த உத்தரவு. அதிமுக அரசுல இருக்கிற 32 அமைச்சர்களைத் தவிர மீதமிருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த பணம் போய் சேரணும். மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ நடக்கும் எல்லா பணிகளின் பெர்சன்டேஜ்லயும் ஒரு பங்கு இதுக்காக செலவிடப்படணும். மாசம் ஐம்பது லட்சம் அளவுலேர்ந்து இது இருக்கலாம்.
வர்ற தேர்தலை வெச்சி இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சிட்டாரு எடப்பாடி. இந்த ஆட்சி முடியுற வரைக்கும் இது தொடரணும்னு வாய்மொழி உத்தரவு. இதன் மூலமா சம்பாதிக்க முடியாம இருக்கிற பல அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மாசம் பொறந்தா சம்பளம் மாதிரி இது வரும். திமுக எம்.எல்.ஏ.க்களும் இதுல பலன் அடையுறதையும் தவிர்க்க முடியாது. திமுகவினருக்கு ஏற்கனவே கொடுத்துட்டு வர்றதைப் போல கான்ட்ராக்ட் ஒத்துழைப்பு தொடரும்.
திமுகவை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாதுன்னு கடலூர்ல ஸ்டாலின் பேசியிருக்காரு. ஆனா, உண்மையிலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்களை இனிமே திமுக தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்குச் சில வேலைகளை எடப்பாடி செஞ்சுக்கிட்டிருக்காரு” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.