திரை தரிசனம்: பிளைண்ட் பீஸ்ட்!

முகேஷ் சுப்ரமணியம்
தொடுதல் உணர்வைக் கலையாய் மாற்ற முற்படும் பார்வையற்ற சிற்பக் கலைஞனுக்கும் அகப்பட்ட பெண்ணொருத்திக்கும் நிகழும் உடல் மீதான போரும் அமைதியுமே பிளைண்ட் பீஸ்ட் .

பிளைண்ட் பீஸ்ட் ஒரு பார்வையற்ற சிற்பியின் கதையை நமக்குச் சொல்கிறது. மிச்சியோ ஒரு பயண மசாஜ் நிபுணர் என்ற போர்வையில் சரியான பெண் உடல் பாகங்களைத் தேடி நகரத்தில் சுற்றித் திரிகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட பிரபல மாடலின் மேல் வெறித்தனமாக இருக்கிறார். தனது தாயின் உதவியுடன் அவளைக் கடத்த முடிவுசெய்து, முற்றிலும் புதிய கலை வகையை உருவாக்கும் நம்பிக்கையில் அவளை தனது யாருமறியாத கலை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் செல்கிறார்.
மசுமுரொ என்ற பெரிதும் அறிந்துகொள்ளப்படாத ஜப்பானிய கலைஞனின் கைகளில் திரைக்கதையின் சதி அதன் அடிப்படை அணுக்களுக்குக் கீழே ஆரம்பமாகிறது. ஓர் ஒதுங்கிய குடோனின் அடித்தளத்தில் உள்ள சிற்பக் கலைஞரின் ஸ்டூடியோவில், ஒவ்வொரு சுவரும் பெண்ணின் உடல் அங்கங்களான மார்பகங்கள், கண்கள், உதடுகள் என அமைக்கப்பட்டிருக்கின்றன. மிச்சியோ அவற்றை தன் மாடலுக்குக் காட்டுகிறார். அதன் மூலமாக தன் கலையின் வேட்கையை அவளிடம் வெளிப்படுத்துகிறார்.
கடத்தப்பட்டதன் தொடக்கத்தில் பயந்தபோன அவள், அவனிடமிருந்து தப்பித்து ஓட பல முறை முயன்று பின்பு அகப்படுத்தியவனின் அன்னப்பறவையாக மாறுகிறாள். ஒவ்வோர் உணர்வுக்கும் ஒரு கலை என இருக்கும்போது, பார்வையற்றவர்களுக்கான கலை என்பது தொடுதல்தான் எனத் தீவிரமாக நம்பும் மிச்சியோ, அவளை தன் மாடலாக மாற சம்மதிக்க வைக்கிறான். அவள் விருப்பத்தை மீறி வல்லுறவில் ஈடுபடுகிறான். அவள் விருப்பத்துடன் கலை சிருஷ்டியில் ஈடுபடுகிறான். பின் அவள் விருப்பத்துடன் அவளுடன் இருக்கிறான். அவளை அடைகிறான். அவளும் அவனை அடைகிறான்.
நாட்கள் செல்கின்றன. இருள் நிறைந்த ஸ்டூடியோவில் அவளும் தன் பார்வை சக்தியை இழக்கிறாள். தங்கள் ரத்தத்தைக் குடிக்கிறார்கள். சதைகளைப் புசிக்கிறார்கள். ஆதி மிருகத்தின் நாகரிகத் திரையிழந்த தூய ருசி. கலையின் பைத்திய நாவையும், காமத்தின் தீக்கரங்களையும் தங்களைப் பணயம் வைத்து மீண்டுவரவே முடியாத ஓர் ஆட்டம் ஆடத் தொடங்குகிறார்கள்!
1969ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை யசுஜோ மசுமுரொ இயக்கியுள்ளார். கலைஞனின் தூண்டுகோலையும் அவை கேட்கும் கலை ஒப்புதலையும் எல்லையையும் மீட்பையும் பேசும் கலாபூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட இந்தப் படம் முக்கியமான படைப்பாக இன்றும் கலாரசிகர்களால் போற்றப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.