பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்‌ஷன்!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது குறித்து விக்ரம் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக உருவாக்கிவிட வேண்டும் என அரை நூற்றாண்டு காலமாக முயற்சித்துவருகிறது. ஏற்கெனவே ஒருமுறை அதற்காக முயற்சித்து பின் மீண்டும் தற்போது அந்த பணியில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை லைகா தயாரிப்பதாக இருந்து பின்னர் பின்வாங்கிய நிலையில் தற்போது யார் தயாரிப்பது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அனுஷ்கா என பெரிய நட்சத்திரக் கூட்டணியே நடிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. படக்குழு முறைப்படி அறிக்காவிட்டாலும் முதன்முறையாக தான் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியவர் ஐஸ்வர்யா ராய். அதைத் தொடர்ந்து தற்போது விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து உறுதியளித்துள்ளார். கடாரம் கொண்டான் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள விக்ரம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "மணி சாருடைய அடுத்த படத்தில் நடிக்கவுள்ளேன். எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடக்கத்தில் துவங்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார் . விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த புதிய படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடனே மகாவீர் கர்ணா படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விக்ரம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.