சரவணபவன் ஹோட்டல் ராஜகோபால் கவலைக்கிடம்!!

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.



ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் , சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் காலதாமதமின்றி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 9ஆம் தேதி சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல் நிலை சீராக இல்லாததால் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு முதல் ராஜகோபாலுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.

அவரது இதயத் துடிப்பு குறைந்து வந்ததுடன், சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி கோரி ராஜகோபாலின் மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதனை இன்று (ஜூலை 15) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு, ராஜகோபாலின் உடல் நல குறைபாடுகள் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த தகவல்களை ஸ்டான்லி மருத்துவமனையில் பெற்று விளக்கமளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.