அறம் எனப்படுவது அன்பு காட்டுதல்!!

பாவலனும் இசைநிலாவும் பள்ளித்தோழர்கள். அன்று இருவரும் பாடசாலை முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தனர்.
மழையும் சற்று தூறிக்கொண்டிருந்தது. மழை அங்கியுடன் அவசரமாக வந்த இருவரையும் “குவா—குவா” என்ற மெல்லிய சத்தம் தடுத்து நிறுத்தியது.
சத்தம் வந்த திசையைப் பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் சைகைபேசியபடியே அந்த இடத்தை அடைந்தனர். தூறல் மழையில் நனைந்தபடியே நடுங்கிக்கொண்டிருந்தது சிறிய நாய்க்குட்டி ஒன்று.
அதனைப் பார்க்க இருவருக்கும் மிகப்பரிதாபமாக இருந்தது. அள்ளி எடுக்கப்போன  இசைநிலாவை அவசரமாய் தடுத்தான் பாவலன்.
“ஏய், அது ரொம்ப அழுக்கா இருக்கு, தொடாதே,” என்றான்.
சட்டென நிமிர்ந்து பார்த்த இசைநிலா “பாவம்டா” என்றாள்.
“அது கிடக்கட்டும், தொட்டா வருத்தம் வருமென்று அம்மா சொல்லுவாங்க” என்றான்.

“அதுக்கில்லடா, இது குழந்தைக்குட்டி, அதோட மழையில நடுங்கிக்கொண்டிருக்கிறது, அதனால இதை எடுத்துக்கொண்டுபோவம், எங்கட வீட்டிற்க கொண்டுபோய் அப்பாட்ட குடுப்பம், அவர் பாத்துக்கொள்ளுவார்” என்றாள்.
“உங்கட வீட்டில பேசமாட்டாங்களா?”

“உயிர்கள் மேல கருணையா இருக்கவேணும் எண்டுதான் அப்பா சொன்னவர், இதுவும் உயிர்தானே, வா கொண்டுபோய் குடுப்பம்”
“அப்பிடியா, சரி தா, நான் கொண்டுவாறன்”
“இல்ல, நான் கொண்டுவாறன்”

மழை அங்கியைக் கழற்றிய இசைநிலா நாய்க்குட்டியை அதில் அழகாகச் சுற்றியபடி கைகளில் தூக்கிக்கொணடாள்.
இருவரும் மகிழ்வோடு நடந்தனர்.

அன்பெனப்படுவது யாதெனில் எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்தலே ஆகும்!!

கோபிகை
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.