தாம்பத்தியம் -கவிதை!!

அப்புச்சியின் ஒத்த செருமலில்
மொத்த வயசையும் மறந்து
ஓடோடிச் சென்று
தண்ணீர் கொண்டு வந்து
தந்திடும் பாழுங்கிழவி
அப்பத்தாள் இன்னும்
ஏனோ எழ மறுத்து
படுத்திருந்தாள்!..


நகயிடுக்கை
நோண்டும் சாக்கில்
மூக்குக் கண்ணாடி
இடை தூவாரத்தில் பார்க்கும் அப்புச்சியின் பார்வையை
புரிந்து கொண்டு
நகவெட்டியுடன் அருகில் அன்பொழுகியவாறே
வந்தமரும் அப்பத்தாள்
சிறிதும் அசையாது இருந்தது
எட்டாம் அதிசயம் தான்!..

மெத்த விருந்தாயினும்
ஒத்த வெத்தலை மடித்து
ஓரமாய்ச் சுண்ணாம்பு தடவி
அப்பத்தாளின்
வெட்கச் சிரிப்பைக் கலந்து
கொடுத்த பின்பு தான்
சிவந்து செரித்திருக்கும்
அப்பச்சியின் வாய் இன்று
உலர்ந்து வெடித்திருந்தது!..

அன்யோன்யமோ?
அன்பின் வெளிப்பாடோ?
பார்ப்பவர்களையும்
பொறாமை கொள்ளச் செய்யும்
அளவிற்கான நெருக்கம்
அப்பச்சிக்கும் அப்பத்தாளுக்கும்
இடையே முழுமை அடைந்திருப்பதை
இன்று உணர முடிந்தது!..

வீதியுலா செல்லும்
ஐயனாராய் அப்புச்சி
முன் செல்ல...
வட்ட நெத்தியில்
எட்டணாவை
சிவப்பாக்கிக் கொண்டு
அம்மனாய் பின் தொடரும்
அப்பத்தாளை தரிசிக்கத்
தவறாத ஊர் ஏனோ
இன்று தலையைக்
கவிழ்த்திருந்தது!..

அதிகாலை ஆயாசமாக
அப்புச்சி கண் சுருக்கி
புரட்டிக் கொண்டிருக்கும்
செய்தித்தாள்களைக்
கிழித்துக் கொண்டு
உள்நுழையும்
அப்பத்தாள் ஆற்றிய
நுரை தள்ளிய
பில்டர் காப்பியின் வாசனை
ஏனோ இன்று
அடுப்படிக்கு உள்ளேயே
சிறைபட்டிருக்கிறது!..

லட்சுமி கடாட்சமாய்
அப்பத்தாள் கூடத்தில்
அசையாது படுத்திருக்க
அதை கண் கொட்டாமல்
பார்த்த வண்ணமே
தன் மூச்சினை
துறந்திருந்தார் அப்புச்சி!..

கூட்டத்தில் யாரோ
"சனிப் பொணம்"
தனியாப் போகவில்லை
என்று கூவ..
அவர்களுக்கு
எப்படிச் சொல்லிப்
புரிய வைப்பேன்
தாம்பத்தியத்தின் முக்திநிலை இதுவென...

கவிஞர் ஆபா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.