அமெரிக்காவின் ஏவுகணை சோதனை குறித்து ஐ.நாவில் சிறப்பு விவாதம்!

அமெரிக்காவினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.


இன்று(வியாழக்கிழமை) இதுகுறித்த சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போர் காலத்தில் 1987ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது.

ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சுமத்தி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷ்யா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை கடந்த 19 ஆம் திகதி அமெரிக்கா பரிசோதனை செய்தது.

இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ. தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது’ என கூறப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை ‘இராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்’ என கூறி ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.

மேலும் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் முன்பாகவே அமெரிக்கா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனையடுத்து இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனை குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.