பெண் ஆணுக்கு தாலி கட்டிய திருமண நிகழ்வு சமூகத்தில் வளர்ந்துவிடுமா?

அது(தாலி) அடிமைத்தனத்தையே காட்டுகிறதெனில் அறுத்தெறிந்துவிட வேண்டியதுதானே
அல்லது தாலி கட்டும் சடங்கை புறக்கணிக்க வேண்டியதுதானே
அதைவிடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிக்கொள்ளவதால் ஆண் பெண் சரிசமமாக பார்க்கும் நிலை சமூகத்தில் வளர்ந்துவிடுமா?


புலம்பெயர்ந்து போய் இப்போ புதுப்புது கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நம்மவர்கள்.

வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாரிசுகளில்  புதுசு புதுசாக பைத்தியங்கள் சிலர் கிளம்பி வந்து ஈழத்தமிழருக்கு வகுப்பெடுக்க வெளிக்கிட்டிருக்கினம்..

இவர்கள் சைக்கோ தனமாக செயற்பட்டு தமிழரின் பண்பாடு கலச்சாரம் சடங்கு சம்பிரதாயங்களில் அவை ஏன் செய்யப்படுகின்றன என்ற விஞ்ஞான உண்மைகள் கூட புரியாமல் புதிதாக சிந்திக்கிறோம் என்ற பெயரில் தங்களுக்கென்று ஒரு வட்டத்தை வகுத்துக்கொள்கின்றனர்..

புலம் பெயர் நாட்டில் பிறந்து ஒரு நாளேனும் தூய தமிழில் சக தமிழனோடு கூட உரையாட முடியாத நீங்கள் எல்லாம் என்ன தமிழ் கலாச்சாரம் என்று புதிய படம் போடுகிறீர்கள்

சுவிஸ் நாட்டில் பைத்தியத்தனமான விசித்திரமான திருமண நிகழ்வு ஒன்று ஈழத்தமிழர்களால் அரங்கேறியுள்ளது..

 உண்மையில் புலம்பெயர் தமிழர்களில் முக்கால் வாசி  பேர் ஐரோப்பிய கலாச்சாரத்தில் தான் எல்லாம் செய்கின்றனர். ஆனால் ஒரு சில விடயங்களில் தமிழன் அப்பிடி இருந்தால் என்ன இப்பிடி இருந்தால் என்ன என்று சிந்தித்து பண்டைய காலம் காலமாக இருந்துவரும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மாற்ற முனைகின்றனர்.. என்னை பொறுத்தவரை இது படம் காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் விசித்திரமான செயற்பாடுகளே..

தாங்களும் தமிழ் பற்றாளர்கள் என்று காட்டுவதற்கும் பிரபலமாவதற்கும் வழி தேடுகின்ற செயற்பாடுகளே இது..

பெண் ஆணுக்கு தாலி கட்டிய திருமண நிகழ்வு  என்பது வளர்ந்துவரும் எமது தலைமுறையில் பண்பாட்டு பிறழ்வு ஏற்பட்டு வருகிறது என்பதையே சுட்டுகிறது.

இவ்வாறுதான் தமிழரின் நிழல் அரசில் திருமணம் நடந்தது என்ற விளக்கம் வேற கொடுக்கிறீர்கள்.. தமிழரின் அரசின் காலத்தில் எப்படி திருமணங்கள் நடந்தன என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்கள் புதிதாக தொல்காப்பிய விளக்கம் சொல்ல தேவையில்லை...

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால் காலம் காலமாக பின்பற்றப்படும் தமிழரின் கலாச்சார பண்பாட்டு முறைகளை சம்பிரதாயங்களை மாற்ற முற்படாதீர்கள்..

உங்களது கீழ்த்தரமான செயற்பாட்டால் அழகான ஒரு திருமண நிகழ்வு அசிங்கப்பட்டு நிற்கிறது...

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை...

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது””’

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்.

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ தான் சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை. அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.

தமிழர்களின் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்...

1.நாட்கால் நடல்:
இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.
பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நடவேண்டும்.

மரத்தின் நுனியில், முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.
பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு பந்த கால் நட வேண்டும்.

சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும்.
பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும்.

மாவிலை, நவதானியம், வெள்ளி நாணயம், பூ, தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்:
திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றி பாதுகாக்க பட வேண்டியது ஆகும்.

நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலியாக
வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய பொற்கொல்லரிடம் புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

3.கலப்பரப்பு:
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப்பெண் அமர்ந்து மங்கலப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இருவீட்டாரும் கலந்து ஒன்றாகி விட்டதற்கான
அடையாள நிகழ்ச்சி. கலம் என்பது பாத்திரம் ஆகும்.

பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தெங்காய், பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும்.

4. காப்பு கட்டுதல்:
காப்பு என்பது அரண் போன்றது.
மங்களகரமான சக்தி வாய்ந்த மங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஷ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு .

காப்புக்கட்டுவதில் இருந்து மறு நாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.

அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5. வாழை கட்டுதல்:

கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் வம்சம் தழைத்தோங்கும் இரகசியம் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

6.முளைப்பாலிகை:
நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை
சாந்தி செய்வது .

முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வது போல் குடும்பமும் செழித்து வளரட்டும்
என்பதற்கான அடையாளச்சடங்கு .

கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம் .
எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப் படுகின்றது.

7. தாரை வார்த்தல்: (கன்னிகாதானம்)
தாரை என்றால் நீர் என பொருள் .
நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக் கூடியது .

இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர் .
திருமணச் சடங்குகளில் மிக முக்கியமானது தாரைவார்த்தல்.

தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம்
என்பதற்கான உறுதிமொழி.

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக் கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை,மணமகனின் கை , மணப்பெண்ணின் கை ,
மணப் பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை.

இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.
உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப் பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படும்.

8. தாலி கட்டுவது:
தாலி என்பது மணமகன்,மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும்.
மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும்.

மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும். தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள்
மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய் விடுவார்.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும்.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது.
தெய்வீக குணம், தூய்மையான குணம்,மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம்,ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க
வேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப் படுகிறது.

"சங்க காலத்தில் தாலி"


மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் "புதுநாண்" என்றனர்.
(அள்ளூர் நன்முல்லையார்- குறுந்தொகை 67)

தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் "வாலிழை மகளிர்" என்று குறிப்பிடுகிறார்.
( குறுந்தொகை 386)

பெயர் வர காரணம்


தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயினும் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து வெய்யிலில் காயவைத்து நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள் கயிறு கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும்.

தாலி கட்டப்படும் முறை

கூறை உடுத்தி வந்த மணமகள் மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை (தாலி) இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்

“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”

பொருள்:-

"ஓம்! பாக்கியவதியே யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக"

என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.

மற்றும் தற்காலத்தில் தாலிகள் பல வகைப்படுகிறது ஒருவருடைய ஜாதக பொருத்தத்திற்கு தகுந்தால் போல் தாலியின் வகை தீர்மாநிக்கப்படுகின்றது. கீழே உள்ள படத்தில் தாலியின் வகைகள் உள்ளது.

9. ஹோமம் வளர்த்தல்:
வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும்.

ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும்.
ஹோமத்தில் இடப்படும் பொருட்கள்
சுற்றுப்புறத்தை சுத்தப் படுத்துகிறது.

ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும்.

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

10. கும்பம் வைத்தல்:
கும்பம் இறைவனது திரு உடம்பின்
அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம்.

இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும் கும்ப வஸ்திரம் உடம்பின் தோல் நூல் நாட நரம்புகள் குடம் தசை தண்ணீர் இரத்தம் நவ ரத்தினங்கள் எலும்பு தேங்காய் தலை மாவிலை தலைமயிர் தருப்பை குடுமி
மந்திரம் உயிர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

11. அம்மி மிதித்தல்:
அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செய்வதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும்.

அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும்.
திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.

 12. அருந்ததி பார்த்தல்:
அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார்.

ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள்.

இதைத்தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம். ஏழு நட்சத்திரங்களில், ஆறாவது நட்சத்திரமாக இருப்பவர் வசிஷ்டர் ஆவார்.

இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.

ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும்
வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும்
பார்க்கலாம்.

மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா,
ஊர்வசி, மேனகை இவர்களிடம்
சபல பட்டவர்கள்.

அதேபோல் அவர்களுடைய
மனைவிகளும், இந்திரனனின் மேல் சபலப் பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

இதே போல கணவனும் மனைவியும் வேறு ஆண் பெண் மீது சபலமில்லாமல் வாழ வேண்டும் என்பது தான் பொருள்..

13. ஏற்றி இறக்குதல்:
மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு, நிறை நாழி, சந்தனக்கும்பா, பன்னீர்ச்செம்பு, தேங்காய், பழம், குங்குமச்சிமிழ், மஞ்சள் பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு .

மேலும் அருவ நிலையிலிருந்து
மணமக்களை ஆசிர்வதிக்கும்
தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ,
முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப் படுவதும் உண்டு.

14. அடை பொரி:
பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும், பல உருவத்தைக் காட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் திருமண நிகழ்வுகளால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஷங்களை நீக்க வல்லது .

இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

15. நிறை நாழி:
நித்தமும் குத்து விளக்கு என்று
சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.

16. ஒலுசை:
ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர்.
மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி
சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது .

ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந்து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.

17. மணமகள் பொங்கலிடுதல்:
முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள்
அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் சூரியன்
முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும்.

மணமகள் வீட்டுப் பொறுப்பை
ஏற்றுக் கொண்டாள் என்பதைக்
வெளிப் படுத்துவது.

புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.
இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல்.

இன்று போல் என்றும் வாழ்க்கை பால் போல் பொங்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

18. பிள்ளை மாற்றுவது:
எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும் நீங்கள் பச்சைக்குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல் வடிவ
உபதேசம்.

பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல
முறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது.
திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு

“மங்கல மென்ப மனைமாட்சி மற்ற                     
தனன்கல நன்மக்கட் பேறு –
திருவள்ளுவரின் வாக்காகும்.
நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு.

19. மறுவீடு:
மண மகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு
மகிழ்ந்து – உறவை வலுப் படுத்துவது .

ஒரு பெண்ணிற்கு பிறந்த வீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது .
மகளை வாழ்க்கையின் மறு பக்கத்தை காணச் செய்வதே மறு வீடு ஆகும்.

20. கோவிலுக்கு அழைத்துச் செல்லுதல்:
நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் .

வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி
செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இப்படி  திருமண நாளில்  செய்யும் ஒவ்வோரு சடங்குகளும் அர்த்தம் உடையவை.

பண்பாடுகளை மாற்ற முனையதீர்கள்.
எமது தலைமுறை எதிர்காலத்திலும் தமிழர்கள் என்னும் அடையாளத்தோடு வாழ வேண்டுமாயின் கலாச்சார. பண்பாடுகளில் பிறழ்வு ஏற்படாமல் பின்பற்ற வேண்டும்...
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.