சிறைக்குள்ளேயே சிதம்பரம் கைது!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த நிலையில் சிபிஐயால் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில் 55 நாட்களாக நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட காவல் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய நீதிமன்றம் அனுமதி
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 30 நிமிடங்கள் வரை விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் கைது செய்யலாம்.நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அவரை கைது செய்வது கண்ணியமாக இருக்காது” என்று உத்தரவிட்டார்.
சிதம்பரம் கைது
இந்த நிலையில் 3 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு இன்று (அக்டோபர் 16) திகார் சிறைக்குச் சென்றது. அங்கு சிதம்பரத்திடம் அவர்கள் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. விசாரணைக்குப் பிறகு சிதம்பரத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, சிறை வளாகத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.
கைதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதன்பிறகு அவரை காவலில் எடுக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “நான் எனது தந்தையை சந்தித்து வந்தேன். அவர் நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார். இதுபோன்ற விளையாட்டுக்கள் அரசியல் நாடகங்களுக்கானது. தற்போது நடைபெறுவது ஒரு போலி விசாரணை” என்று தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.