ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு!
அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இதற்கிடையே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. சிபிஐ நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது என்றும், விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சிதம்பரத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும், சிதம்பரம் தற்போது அமலாக்கத் துறை கஸ்டடியில் இருப்பதால், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 23) ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், “சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே சிதம்பரத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அது தீய நோக்கமுடையது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவல் நாளையுடன் முடியும் சூழ்நிலையில், காவலை நீட்டிக்க அமலாக்கத் துறை கோரவில்லை என்றால் அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படுவார். அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்துவிடுவார்.
கருத்துகள் இல்லை