சஜித், தந்தையின் பாதையில் பயணிப்பதாக சொல்கிறார் தாஜுதீன்!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் சேவை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறங்கியுள்ளார் என இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம். தாஜுதீன் தெரிவித்துள்ளார்.


பொத்துவில் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் அறுகம்பை தனியார் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் சேவை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே தற்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இன்று அவருடைய மகன் சஜித் பிரேமதாஸ களமிறங்கியுள்ளார்.

தந்தை விட்ட இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதால்தான் இன்று அவர் ரணசிங்க பிரேமதாசவின் பாதணிகளை அணிந்து அவரைப் போன்றே ஆடை அணிந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் 1990 ஆண்டு பொத்துவில் பகுதியில் அசாதாரண காலங்களில் இலவச மின்சார இணைப்பை வழங்கி உதவியவர். இவரை பொத்துவில் மக்கள் எவரும் எளிதில் மறந்து விடமாட்டார்கள் என நம்புகின்றேன்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தான் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இனவாத கருத்துக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் மாபெரும் இனவாத முகவர்களான உதய கம்மன்பில, ரத்ண தேரர், ஞானசார தேரர், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற அனைத்து இனவாத குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ள கட்சியாகவே இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காணப்படுகிறது’ என தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.