நான் சுஜித் பேசுகிறேன்!
திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சுஜித் நினைவாகக் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் தாயின் கருவறையில் பிறந்து கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்தது என்று சுஜித் கூறியது போன்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுஜித் நினைவாகவும், ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்.
அந்த கல்வெட்டில், நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும், என்னைப் போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளைத் திறந்து வைக்காமல் என்னைப் போல் உள்ள குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்கவும். என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பு அமைப்பாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து காப்பாற்ற முடியாமல் உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேமிப்பு அமைப்பாகவும், மூடப்பட்டும் வருகின்றன.
கருத்துகள் இல்லை