"தியாக தீபம்" அன்னை பூபதி அவர்களின் 87ஆவது அகவை நாள் இன்றாகும்.!!

(03/11/1932 - 19/04/1988)
நவம்பர் 03 – மட்டக்களப்பில் அமைதிப் படை என்று வந்து ஆக்கிரமிப்பு படையாக மாறி தமிழின அழிப்பு தாண்டவமாடிய இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களின் பிறந்த தினம் இன்று.

அன்னை பூபதி மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய்.
மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர்.
தமிழர்களையும் தமிழினத்தின் போராட்டத்தையும் அழிக்க ஆக்கிரமித்து ஆட்டம் போட்டு கொண்டு இருந்த இந்தியப் படைக்கு எதிராக அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன:
1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.
அகிம்சை மொழியின் உணர்வும் வலியும் புரியாத இந்தியத்திற்கு தம்மை உயிரீகம் செய்தேனும் புரிய வைக்க அன்னையர் நினைத்தனர்.
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். அவர்களுள் இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.
முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அன்னையரின் போராட்டம் தோற்றுப் போகக் கூடாது என அன்னை பூபதி கிளர்ந்தெழுந்தார்.
முதுமையோ தள்ளாமையோ அவரை கட்டிப் போடவில்லை.
பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர் பெற்ற பிள்ளைகள் மட்டுமன்றி மண்ணில் அன்னை உயிர் துடிக்க பார்த்திருந்த மண்ணின் பிள்ளைகள் பரிதவிக்க அம்மா .நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது.
ஆயினும் அன்னை தன் உறுதி குலையாமல் போராடினார். போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் கலக்கம் இன்றி வலிமையோடு போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் தள்ளாத வயதிலும் தளராத மனதோடு போராடிய அன்னையின் உயிர் 19.04.1988 அன்று பிரிந்தது.. அல்ல … இந்திய துரோகத்தால் அன்னையின் உயிர் பறிக்கப்பட்டது ஈவு இரக்கம் இன்றியே…
.
மண்ணோடும் மண்ணில் வரலாற்றோடும் அன்னை இன்றும் வாழ்கிறாள் ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களிலும்.
அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு இன்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.