இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ: சமரசத் தீர்வு மையத்தை நோக்கி!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோஸ் ஆகியோரிடையே நடைபெற்று வந்த ஸ்டூடியோ தொடர்பான உரிமையியல் வழக்கை சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டிருக்கின்றனர் நீதிபதிகள்.

இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டூடியோஸுக்குள் அமைந்துள்ள இடத்தில் தனது ஸ்டூடியோவை நிர்வகித்து வருகிறார். கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களுக்கும், அதற்கும் மேலான இசை ரசிகர்களுக்கும் உன்னதமான பல பாடல்களை இளையராஜா உருவாக்கிய இடம் அது என்பதால், ஒரு எமோஷனலான இடமாகவே அது இருக்கிறது. இளையராஜாவின் ஸ்டூடியோவில் தன் பாதங்கள் பட்டுவிடாதா என்று ஏங்கிக்கிடக்கும் எத்தனையோ ரசிகர்களுக்கு மத்தியில், இளையராஜாவே உள்ளே நுழைய முடியாத சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
பிரசாத் ஸ்டூடியோஸ் நிர்வாகத்தினர், இளையராஜா இனி இங்கு ஸ்டூடியோ வைத்து நடத்தக்கூடாது என்று அறிவித்த நாள் முதலாக தமிழகமே அதிர்ச்சியில் கிடக்கிறது. யாரும் விரும்பாத இந்த சச்சரவை உரிமையியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று நீதி கேட்டார் இளையராஜா. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தவும், விரைந்து விசாரித்து தீர்ப்பு கொடுக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சமரசத் தீர்வு மையத்திற்கு இந்த வழக்கினை அனுப்பி விரைவில் தீர்வு காணவேண்டும் எனக் அறிவுறுத்தியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.