லிபிய போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஐ.நா. வலியுறுத்தல்!

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் லிபியாவில், உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.


எண்ணெய் வளம் நிறைந்த வட ஆபிரிக்க நாடான லிபியாவில், நீண்டகாலமாக நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, கடந்த வாரம், ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ‘லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு’ நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில், இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லிபியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்கள், தங்களுக்கிடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.

இதன் மூலம், அந்த நாட்டில் கூடிய விரைவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகள் விரும்புகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினர் கடந்த 2011ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.

எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தார் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.