இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று? உடனடியாக ஐ.டி.எச் க்கு அனுப்பி வைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென விமான நிலைய சுகாதார பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்களில் 47 வயதான இந்திய பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த பயணி விமான சேவை ஊழியர் ஒருவரை அழைத்து தான் கடுமையான குளிரை உணர்வதாகவும் அதேபோல் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விமானத்தின் பிரதான விமானிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்புகொண்டு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டு குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நிலையில், அவரின் உடலில் 101 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, அதே விமானத்தில் பயணித்த 37 வயதான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கருவிகளின் ஊடாக இனம் காணப்பட்டுள்ளார்.

அவரின் உடலில் 102 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டதை அடுத்து அவரும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் நால்வர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லையென வைத்தியர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.