எனது பாதுகாப்புக்கு காவல்துறையினரே பொறுப்பு: காயத்ரி கந்தாடை!
சென்னை பெசன்ட் நகர்ப் பகுதியைச் சேர்ந்த காயத்ரி கந்தாடை என்பவர், அப்பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டதற்காக ஜனவரி 1 அன்று கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், கோலம் போட்டவர்களில் ஒருவரான காயத்ரி கந்தாடை என்பவர் தனது முகநூல் பக்கத்தில், Bytes for All என்னும் பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். the association of all pakistan citizen journalists அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு இங்கிருக்கும் அறப்போர் இயக்கம், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா ஆகியவை ஆதரவாக இருப்பது தெரியவருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று (ஜனவரி 2) மதுரையில் பீப்பிள்ஸ் வாட்ச் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காயத்ரி கந்தாடை, பத்திரிகையாளர் சந்திப்பின் போது எனது பேஸ்புக் சுயவிவரத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சென்னை நகர காவல்துறை எனது தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஒன்பது ஆசிய நாடுகளில் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாட்டை எடுத்துக்காட்டி, 2016 ஆம் ஆண்டில் ‘Bytes for All’ல் [பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஒரு வக்கீல் குழு] அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தேன். அதில் , பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்தும் எழுதியுள்ளேன். காவல்துறை அந்த அறிக்கையை முழுவதுமாக படித்துப் பார்த்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்க வேண்டும் என்றார்
பெசன்ட் நகரில் ஏற்கனவே ஒரு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கோலத்தின் மேல் நோ சிஏஏ என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்தே போலீசார் அங்கு சென்றனர் என்று ஆணையர் விஸ்வநாதன் கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய காயத்ரி கந்தாடை, காவல்துறை கூறும் அந்த நபரின் வீட்டுக்குச் சென்று கோலம் போடவில்லை. அவர்களைச் சந்திக்கவும் இல்லை. எங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் வீடுகளின் முன்பு நாங்கள் கோலம் போடவில்லை என்றுள்ளார்.
பீப்பிள்ஸ் வாட்ச் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபாக்னே கூறுகையில், ” காயத்ரி, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை பாதுகாவலர்களை காவல்துறையினர் குறிவைத்து வழக்குப் பதிந்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் காவல்துறையின் நடவடிக்கைக்கு அறப்போர் இயக்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், அறப்போர் இயக்கம் சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி வருகிறது. காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் எங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டிக்கும் கட்சிகளைப் பற்றிப் பேசும் போது ஆணையர் விஸ்வநாதன் முதன்மை எதிர்க் கட்சியான திமுகவைப் பற்றி ஏன் பேசவில்லை என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர் டிஜிபி ஆவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற காரணத்துக்காகக் கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை