பொன்னியின் செல்வன் ‘நம்பவே முடியல’: ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஆச்சரியத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று(ஜனவரி 2) வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப்படத்திற்கு மணிரத்னம் மற்றும் குமாரவேல் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துவருகிறார். அவரது கனவு படைப்பாக உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், அஷ்வின், லால், ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜூன் சிதம்பரம் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துவருகின்றனர். இந்தநிலையில் ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் தற்போது இந்தப்படத்தில் இணைந்துள்ளார்.
அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்க்க அத்தனை பொறுமையுடன் காத்திருக்க முடியவில்லை. இப்படி ஒரு கனவு குழுவில் நானும் இணைந்துள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’என்று தெரிவித்துள்ளார்.
நேற்று படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.