இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு ரயில்முன் பாய்ந்த தந்தை!

அதிக மனஅழுத்தத்தை எதிர்கொண்ட டெல்லியை சேர்ந்த தந்தை ஒருவர், பாசமாக வளர்த்த தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 44 வயதான மதுர் மலானி என்பவர் தனியார் காகித தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரூபாலி என்கிற மனைவியும், 14 வயதில் சமிக்ஷா என்கிற மகளும், 6 வயதில் ஷ்ரேயன்ஸ் என்கிற மகனும் இருந்தனர்.

மலானி பணிபுரிந்து வந்த தொழிற்சாலை 6 மாதங்களாக மூடப்பட்டு இருந்ததால், அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். குடும்பத்தை அவருடைய பெற்றோரே கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் ரூபாலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டார். மாலை 6.45 மணியளவில் வீடு திரும்பிய அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறந்துள்ளார்.

அப்போது அவருடைய இரண்டு குழந்தைகளும் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மெற்கொண்டபோது, கணவரின் பொறுப்பிலே குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் மாலை 5.40 மணிக்கு ஹைதர்பூர் மெட்ரோ நிலையம் அருகே ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் வந்திருந்தது.

அதன்பேரில் அங்கு சென்ற பொலிஸார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, மதுர் மலானி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், குழந்தைகளை கொன்றுவிட்டு மதுர் மலானி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Blogger இயக்குவது.