கிளிநொச்சி அதிபர், அசிரியர் சங்கங்கள் முக்கிய கோரிக்கை!

கல்வியில் பின்தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சுதந்திரமானதும், அச்சமற்ற சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என கல்விச் சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கிய பொறுப்ப சமூகத்திடம் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அதிபர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தின. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கத்தின் தலைவர் ச.பூலோகராஜா தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கவலையடைகின்றோம்.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மிகவும் கவலையுடனும், மன உளைச்சலுடனும் தமது சேவையை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

உண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்னிலையில் உள்ளது. இந்நிலையில் கல்வியில் மாவட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த கடமைகளில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இந்த சமூகத்திற்கே உள்ளது.

அண்மையில் பாரதிபுரம் பாடசாலையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல், மற்றுமொரு பாடசாலையில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட தீ வைப்பு என பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது” என்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் வடக்கு மாகாண செயலாளர் ஜெயரத்தினம் விசாகர் குறிப்பிடுகையில், “இவ்வாறான தாக்கதல் சம்பவங்கள் தொடர்பாக தொழிற்சசங்கம் என்ற வகையில் அவர்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

இதனால் ஏற்படும் இடமாற்றங்கள் காரணமாக கல்வி நிர்வாகம் சீர்குலைந்துகொண்டு போகின்றது. அதிகாரிகள் இது தொடர்பான விடயங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலைக்குச் செல்கின்றார்கள். இதனால் குறித்த பாடசாலைகளுக்கு வேறு ஆசிரியர்களையும் நியமிக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

அவ்வாறான நிலை ஏற்படும்போது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும். எமது மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருகைதரும் ஆசிரியர்கள் கூடுதலாக இருக்கின்றார்கள். அவர்கள் எமது மாவட்டத்திற்கு வருவதற்கு பின்னிற்பார்கள். அதனால் கிளிநொச்சி மாவட்ட பிள்ளைகளின் கல்வியே பாதிக்கப்படப் போகின்றது. இது தொடர்பாக சமூகமும், அரசியல் தலைவர்களும் சிந்தித்து தீர்வினைத் தருவதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு சிவரூபன் தெரிவிக்கையில், “அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தவாறே உள்ளன.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளான அதிபர் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை இதய சுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மாவட்டம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். அனைத்து கல்விசார் விடயங்களும் முடக்கப்படும் வகையில் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.